ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்
தரங்கம்பாடி, ஆக.25- நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள கிருபாலயம் சிறப்புப் பள்ளியில் பயிலும் மனநலம் குன்றிய குழந்தைகள், பொறையார் அரவணைப்பு இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோருக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி அக்கட்சியின் செம்பை தெற்கு ஒன்றியம் சார்பில் மதிய உணவு மாவட்ட செயலாளர் ஜலபதி தலைமையில் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் பழனிமோகன், நகர செயலாளர் பேராசிரியர் தேவசகாயம், நிர்வாகிகள் ஜெயபால், பாக்யராஜ், மாதவன், முத்தழகு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சாலை விபத்தில் இருவர் பலி
மண்ணச்சநல்லூர், ஆக.25- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வடக்கு காமராஜர் காலனியைச் சேர்ந்த பன்னீர் மகன் ராஜ்குமார்(20). புவனேஸ்வரி நகர் கிருஷ்ணன் மகன் கார்த்திக் ராஜா(17). இருவரும் டோல்கேட்டில் உள்ள டுவீலர் பட்டறையில் மெக்கானிக்காக வேலை பார்த்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இருவரும் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று போது எதிரே வந்த அரசு பேருந்து மோதி படுகாயம் அடைந்தனர். இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜ்குமார் இறந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கார்த்திக் ராஜாவும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து நெ.ஒன்.டோல்கேட் காவல்துறையினர் வழக்கு பதிந்து பேருந்து ஓட்டுநர் தொட்டியத்தை சேர்ந்த ஜோதிராஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பின்னவாசல் ஏரியை தூர்வாரியதாக ரூ.40 லட்சம் மோசடி
சிபிஎம் தலைமையில் மக்கள் போராட்டம் அறிவிப்பு
தஞ்சாவூர், ஆக.25- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த பின்னவாசல் பெரிய ஏரியை தூர்வாராமல், தூர் வாரியதாக பொய்க் கணக்கு காட்டி, ரூ 40 லட்சம் மோசடி செய்து, கையாடல் செய்வதற்கு துணை போகும், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளரைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பின்னவாசல் கிராம விவசாய சங்கம், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் வரும் 28 ஆம் தேதி காலை பேராவூரணி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், “பின்னவாசல் கிராமத்தில் 153 ஹெக்டேர் பரப்பளவு உள்ள பெரிய ஏரி உள்ளது. இதன் மூலம் 174 ஹெக்டேர் 12.50 ஏர்ஸ் விவசாய நிலம் பயன்பாட்டில் உள்ளது. இதில் தோராயமாக 700 பட்டாதாரர்கள் பாசனம் செய்து பயன் அடைந்து வருகின்றனர். இந்த ஏரி குடிமராமத்து பணிக்காக அரசு ரூ40 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இந்த குடிமராமத்து பணிக்காக அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை பயன்பாட்டுக்கு கொண்டு வர கிராம பொதுமக்களை, பாசனதாரர்களை கலந்தாலோசிக்காமல், ஒரு சில தனிப்பட்ட நபர்கள் மற்றும் பட்டா இல்லாத நபர்களை, தன்னிச்சையாக சேர்த்துக் கொண்டு அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாக பெற முயன்றனர். இதனை, எதிர்த்து கிராம பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனு அனுப்பப்பட்டது. இது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இதனைப் பொருட்படுத்தாமல் தனிப்பட்ட நபர்களுக்கு குடிமராமத்து பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தப்பட உள்ளது” என தெரிவித்தனர்.