சீர்காழி: நெற்பயிரில் புகையான் தாக்குதலை தவிர்க்க வரப்புகளில் மஞ்சள் பூ பூக்கும் பயிர் செடிகளை பயிரிட வேண்டும் என வேளாண் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே முதலைமேடுதிட்டு கிராமத்தில் பூக்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணைப் பயிற்சி பள்ளி நடைபெற்றது. வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் தலைமை வகித்தார். அத்மா திட்ட மேலாளர் ரேகா வரவேற்றார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி பேராசிரியர் செந்தில்நாதன் பேசினார்.இதைதொடர்ந்து தற்போது இரவு நேரத்தில் குறைந்த வெப்பநிலை நிலவுவதால் சம்பா மற்றும் தாளடி விவசாயிகள் தங்களுடைய வயல்களை தினசரி கண்காணிக்க வேண்டும். குளிர்ந்த வெப்ப நிலை நிலவுவதால் நெற்பயிரை புகையான் அதிக அளவு தாக்கும் வாய்ப்புள்ளது. எனவே புகையான் பூச்சியை கட்டுப்படுத்த வயலைச் சுற்றியுள்ள வரப்புகளில் மஞ்சள் பூ பூக்கும் வெண்டை, உளுந்து, பச்சைப்பயறு, துவரை, சூரியகாந்தி போன்ற பயன் தரும் செடிகளை பயிரிட வேண்டும். இதனால் பயிரைத் தாக்க வரும் புகையான் பூச்சிகள் வரப்பில் உள்ள மஞ்சள் பூக்களில் அமர்ந்து கொள்ளும் அதனை அப்பூக்களில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகள் புகையான் பூச்சிகளை இரையாக உட்கொண்டு விடும். இதற்கு இக்காலஜிகல் இன்ஜினியரிங் முறை என்று கருதப்படுகிறது. இதனை யும் மீறி வயல்களில் புகையான் தாக்குதல் தென்பட்டால் தண்ணீரை சுத்தமாக வடித்து பட்டம் பட்டமாக பிரித்து பயிரை காற்றோட்ட வசதி இருக்கும் அளவுக்கு செய்ய வேண்டும். தழைச்சத்து உரம் இடுவதை தவிர்த்து செயற்கை பவித்ராய்டு மருந்து தெளிப்பதையும் தவிர்க்க வேண்டும். எனவே நெற்பயிர் பூப்பதற்கு முன்பாக வேப்பங்கொட்டை கரைசல் தெளித்து எளிதில் புகையானைக் கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.