சீர்காழி, மார்ச் 15- நாகை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.நடராஜன் ஏழை மக்கள் கல்வி கற்கும் வகையில் சீர்காழியில் 1984 ஆம் ஆண்டு பெஸ்ட் மெட்ரிக் பள்ளியை தொடங்கி, 1975ஆம் ஆண்டு பெஸ்ட் நர்சரி பிரைமரி பள்ளி தொடங்கி, 2000ஆம் ஆண்டு பெஸ்ட் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியாக தொடங்கி, 2002 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு பள்ளியின் நிறுவனர் நடராஜன் நினைவை போற்றும் வகையில் 2015 ஆம் ஆண்டு நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளி தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் 2004 ஆம் ஆண்டு முதல் பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2006-ஆம் ஆண்டு முதல் பெஸ்ட் ஆசிரியர் பயிற்சி நிறுவனமும் நடந்து வருகிறது. பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தலைவராக அமுதா நடராஜன், இயக்குனர்களாக டாக்டர்கள் செந்தாமரைக்கண்ணன், காயத்ரி, செயலாளராக வழக்கறிஞர் ராஜ்கமல், இயக்குனராக அமுதா நடராஜன், பொறியாளர் ஆதித்யா ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இந்த பள்ளி பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் மாவட்ட, மாநில அளவில் முதல் இடங்களை பிடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் காரைமேடு பகுதியில் கட்டப்பட்டு நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளி என்ற புதிய கட்டிட திறப்பு விழா மார்ச் 13 ஆம் தேதி திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் சென்னை பள்ளி கல்வித்துறை ஆசிரியர் தகுதி தேர்வு குழு உறுப்பினர் அறிவொளி புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். அறிவொளி பேசியது, உலகத்தில் இரண்டு இனம் மட்டும் தங்களை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒன்று மருத்துவ சமூகம், மற்றொன்று ஆசிரியர் சமூகம். மருத்துவர்கள் தற்பொழுது உள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிகிச்சை அளிப்பது போல, ஆசிரியர்கள் தினமும் நூலகம் சென்று பல நூல்களை தேடி கற்று புதிய புதிய வடிவத்தில் பயிற்றுவிக்க வேண்டும். நவீன யுகத்திற்கு ஏற்ப கற்றலை மாற்றி அமைக்க ஆசிரியர்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் மாணவர்கள் திறன் மேம்பட முடியும். நான் எம்.எஸ்.சி. படிக்கும் போது இருந்த பாடத் திட்டம் தற்பொழுது பாதிக்கு மேல் பன்னிரண்டாம் வகுப்பு பாடத் திட்டத்தில் உள்ளது. எனவே தங்களை தற்காத்து வைத்துக் கொள்ள மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். மருத்துவர்கள் சரியாக படிக்கவில்லை என்றால் மனிதன் பிணமாகி விடுவான். ஆசிரியர் சமூகம் தங்களை புதுப்பித்துக் கொள்ளவில்லை என்றால் மனிதன் நடைப்பிணம் ஆகிவிடுவான். நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே நூலகத்திற்குச் சென்று பல நூல்களைப் படித்து வாசிக்கும் திறனை வளர்த்துக் கொண்டேன். நான் படித்ததிலேயே சிறந்த நூல்கள் பொன்னியின் செல்வன், தாய், எனவே மாணவர்கள் பாடப் புத்தகத்தை மட்டும் படிக்காமல் நூலகத்திற்குச் சென்று வாசிக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். விழாவில் சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி, பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராஜ்கமல், பொது செயலாளர் பழனியப்பன், நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன், திருவாரூர் முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர் ராஜாராமன், மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனத்தினர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.