tamilnadu

img

தூய்மைப் பணியாளர்களின் கதி உயர்நீதிமன்றம் கணக்கிலெடுக்குமா? - ம.பாலசுப்பிரமணியன்

கோவிட் - 19 நோய்த் தடுப்பு பணியில் முன்களப் பணியாளர்களாக செயல்பட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மதுரையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்த பொதுநலவழக்கையும், கன்னியாகுமரி யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் சங்கத்தின் தலைவர் தலிப் என்பவர் கொடுத்த வழக்கையும் இணைத்து நடத்தப்பட்ட விசாரணையில் நீதியரசர்கள் பி.என். புகழேந்தி, என். பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு மறு விசாரணையை ஜூன் -22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்த போதும், சில இடைக்கால உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.

இடைக்கால உத்தரவு
மேற்கண்ட தீர்ப்பில் பொது இடங்களில் பணிசெய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி ஆகியவற்றை வழங்குவதையும் குப்பைகள் சேகரமாகும் இடங்கள், சந்தைகள் போன்ற இடங்களில் பணிசெய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு மேற்கண்ட பாதுகாப்பு உபகரணங்களோடு, காலில் நீளமான ஷூ அணிந்து வேலை பார்ப்பதை உறுதி செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தூய்மைப் பணியாளர்கள் முகக்கவசம், கையுறை அணிந்து வேலை பார்ப்பதை சுகாதார மேற்பார்வையாளர்கள் தினமும் 3 முறை ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்யும் போது முகக்கவசம் அணியாத பணியாளர்களை செல்போன் மூலம் படம் பிடித்து வாட்ஸ் அப்பில் மண்டல அலுவலருக்கு அனுப்பி வைத்து அவர் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இந்த உத்தரவு நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட 7மாநகராட்சிகளுக்கும் பொருந்தும் எனவும் தமது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் மதுரை மாநகராட்சித் தரப்பில் ஆஜரான சுகாதார அலுவலர் வினோத்ராஜா. மதுரை மாநகராட்சியில் 5300 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பாதாளச் சாக்கடைப் பிரிவில் 2500 பணியாளர்கள் பணிபுரிவதாகவும், மேற்கண்ட பணியாளர்களுக்கு 2 முறை முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள் ளார். இது தவிர மேற்கண்ட வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் எழுப்பப்பட்டுள்ள பணிச்சூழல் குறிப்பாக தூய்மைப்பணி யாளர்கள் ஓய்வறை, தங்குமிடம், உணவு ஏற்பாடு, ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து முடக்கத்தின் காரண மாக குடியிருப்பிலிருந்து பணி தளத்திற்கு வந்து செல்வதற் கான போக்குவரத்து ஏற்பாடு, மருத்துவப் பரிசோதனை, மத்திய அரசு அறிவித்துள்ள ஆயுள் காப்பீடு திட்டத்தில் இணை ப்பது போன்றவை விவாதமின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த அம்சங்களும் விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். தீர்ப்புரையில் சொல்லப்பட்டுள்ள அம்சங்களுக்குள் செல்வதற்கு முன்பாக மாநகராட்சி நிர்வாகம், தமிழக அரசு தரப்பில் அளிக்கப்படும் விபரங்களில் பல்வேறு கள நிலவரம் பற்றிய உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புக்கு உள்ளேயா? வெளியேயா?
மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களைப் பொறுத்தமட்டிலும் நிரந்தரம் - 1200, தினக்கூலி - 700, ஒப்பந்தம் - 1700, (பணி நிரந்தரம்) தொகுப்பூதியம் - 180, தொகுப்பூதியம் - 360, மண் கூட்டும் பணியாளர்கள் - 320, அபேட்  மருந்து ஊற்றும் பணியாளர்கள் - 560, குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் - 250 பேர் என சுமார் 5300 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் சுகாதாரப் பிரிவின் கீழ் வருகின்றனர். இதேபோல், குடிநீர், தெருவிளக்கு, பாதாளச்சாக்கடை, பம்ப்பிங் ஸ்டேசனில் பணிபுரிபவர்கள், பார்க்கில் பணிபுரிபவர்கள், சாலைப் பணியாளர்கள் உட்பட சுமார் 3000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேற்கண்ட பிரிவுகளில் ஒப்பந்தப் பணியாளர்கள் மட்டும் 1800-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். 

பாதாளச்சாக்கடைப் பிரிவில் எத்தனை பேர்?
குறிப்பாக பாதாளச்சாக்கடைப் பிரிவில் நிரந்தரப் பணியாளர்கள் 60 பேர் மட்டுமே இருக்கும் சூழலில் ஒப்பந்த பணியாளர்களோ 240 பேர் வரை உள்ளனர். இவர்களைக் கொண்டு தான் பெரும்பகுதி பணிகள் நடக்கின்றன. தமிழகம் முழுவதும் பாதாளச்சாக்கடைப் பணியாளர்கள் மொத்தம் 900 பேர் என தமிழக அரசு சொல்லிக் கொண்டிருக்க மாநகராட்சித் தரப்பில் ஆஜரான அதிகாரியோ மதுரை மாநகராட்சியில் மட்டும் 2500 பேர் பாதாளச்சாக்கடைப் பிரிவின் கீழ் பணியாற்றி வருகின்றனர் என்று கூறியுள்ளது ஏனோ தெரியவில்லை? இதில் எது உண்மை என்பதை தமிழக அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும். மதுரை மாநகராட்சியில் கொரோனா ஊரடங்கு அறி விக்கப்பட்ட மார்ச் 24 லிருந்து முன் களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, போன்றவை ஏறக்குறைய 10 தினங்கள் கழித்து ஏப்ரல் - 5ஆம்தேதிக்குப் பின்னர் தான் முதல் முறையாக வழங்கப்பட்டன.

பாதாளச்சாக்கடைப் பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, காலணி போன்றவை இரண்டாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கும் தருவாயில் தான் முதன் முறை யாக வழங்கப்பட்டன. இதில், பொறியியல் பிரிவில் பணி யாற்றும் குடிநீர், தெருவிளக்கு, பம்ப்பிங் ஸ்டேசன் மற்றும் பார்க்கில் வேலைப்பார்ப்பவர்களுக்கு மேற்கண்ட பாதுகாப்பு கவசங்கள் தேவையற்றது எனக்கருதி அவர்களுக்கு வழங்கப்படவேயில்லை. இப்பிரிவு தொழிலாளர்களில் பலர் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் முன் களப்பணி யாளர்களாக இருந்தார்கள் என்பது தான் உண்மை. சிஐடியு சங்கம் தொடர்ந்து வலியுறுத்தியதின் பேரிலேயே பின்னர் இவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

தரமற்ற பொருட்களும், விநியோகத்தில் முறைகேடும்
தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முகக்கவச மானது சாதாரண வகையைச் சேர்ந்த தரம் குறைந்தவை யாகும். இதனை அணிந்து கடுமையான கோடைக்காலத்தில் வெட்டவெளியில் பணியாற்றும் போது வழிந்தோடும் வியர்வையும், நமைச்சலும், அரிப்பும் கொண்ட தன்மை யினால், முழுநேரமும் அணிந்து பணிசெய்வதற்கு உகந்த தாக இல்லை.  தூய்மைப் பணியாளர்களில் குப்பை சேகரமாகும் இடங்களில் வேலைப்பார்ப்பவர்களுக்கும், பாதாளச் சாக்கடைப் பணியாளர்களுக்கும் மட்டுமே ரப்பரிலான கையுறைகள் வழங்கப்பட்டன. இந்த கையுறையும் மிகவும் தரம் குறைந்ததாகும். இதனை அணிந்து கொண்டு வேலை பார்க்கும் போது வியர்வையானது கையுறையில் உள்ள ரசா யனக் கலவையோடு கலந்து அருவருப்பூட்டும் துர்நாற்றத் தை வரவழைக்கக்கூடியது என்பதனால் இதனை அணிந்து கொண்டு வேலைபார்க்க தொழிலாளிகள் பெரும்பாலும் விரும்புவதில்லை.

 பாதாளச்சாக்கடை பணியாளர்களுக்கு வழங்கப்படும் காலணிகள் அதிகளவு எடை கொண்டதாக இருப்பதால் இதனை அணிந்து கொண்டு வேலை பார்ப்பதே மிகவும் சிரமமாகும். அதோடு இவை தரமற்றவையாகவும் உள்ளன. ஆக, முன் களப் பணியாளர்களான மேற்கண்ட பணி யாளர்களுக்கு வழங்கப்படும் முகக்கவசம், கையுறை மற்றும் காலணி போன்றவற்றின் தரம் குறித்து மாநகராட்சி நிர்வாகம் தரப்பரிசோதனை அலுவலரிடம் சான்றுப் பெறப்பட்டு வழங்கியதா என்பது கேள்விக்குரியது. இது ஒரு புறமிருக்க. கொள்முதல் செய்யப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வார்டுகளில் பணியாற்றும் தொழிலாளி களுக்குச் சென்று சேரும் போது அதில் நிறைய குளறுபடி களும், முறைகேடுகளும் நடக்கின்றன.

உதாரணமாக ஒரு வார்டில் 50 பேர் பணியாற்றுகிறார்கள் என்றால் அதில் 40 பேருக்கு மட்டுமே பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு மீதம் 10 பேருக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டு அது இடைத்தரகர் மூலம் விற்பனை செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளையில் துப்புரவு ஆய்வாளர் மற்றும் மேஸ்திரியிலிருந்து சுகாதார மேற்பார்வையாளர்கள் வரை அனைவருக்கும் பங்குள்ளது. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 84 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை தூய்மைப் பணியாளர்கள் - பாதாளச்சாக்கடைப் பணியாளர்களுக்கு இரண்டு முறை மட்டுமே பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை மாநகராட்சி சுகாதார அலுவலராக உள்ள அதிகாரியே உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.

60 ஆயிரமும் 9 ஆயிரமும்...
மாநகராட்சியில் வழங்கப்படும் முகக்கவசம் தொடர்ந்து அணிந்து பணிசெய்வதற்கு உகந்ததாக இல்லாதிருக்கும் போது கடந்த 84 நாட்களில் இரண்டு முறை மட்டுமே முகக்கவசம் வழங்கியிருப்பதனால் அவர்களின் பாதுகாப்பு  எப்படியிருக்கும்?  ஒருமுறைப் பயன்படுத்தும் முகக்கவசத்தை அதிகபட்சமாக 6 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும். அப்படியானால் ஒவ்வொரு தொழிலாளிக்கும், நாளொன்று க்கு ஒரு முகக்கவசம் வழங்கினால் கூட, 5300 தூய்மைப்பணி யாளர்களுக்கு மாதத்திற்கு 1 லட்சத்து 59 ஆயிரம் முகக்கவசம் கொள்முதல் செய்திருக்க வேண்டும்.

ஒரு மாதத்திற்கான எண்ணிக்கையே இவ்வளவு என்றால்  மார்ச் - 24 முதல் தற்சமயம் ஜூன் -15 வரையிலான 84 நாட்களில் அதாவது ஏறக்குறைய 3 மாதங்களுக்கு மொத்தம் 4 லட்சத்து 77 ஆயிரம் முகக்கவசம் , கையுறைகள் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மாநகராட்சி நிர்வாகத்தின் கணக்கின்படி இதுவரை 2 முறை மட்டுமே வழங்கப்பட்டுள்ள முகக்கவசம், கையுறைகள் எண்ணிக்கை வெறும் 9000 மட்டுமே. 

இங்கே மற்றோர் விசயத்தையும் குறிப்பிட வேண்டி யுள்ளது. மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்  பணியாளர்கள் உள்ளிட்ட சுகாதாரப்பிரிவு பணியாளர் களுக்கும், பொறியியல் பிரிவில் பணியாற்றும் பணியாளர்கள் உள்ளிட்டு 8500 பணியாளர்களுக்கும் சேர்த்து 60,000 முகக்கவசங்களை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்  சு.வெங்கடேசன் மதுரை மாநகராட்சி ஆணை யாளரிடம் நேரிடையாகவே வழங்கினார். நாளொன்றுக்கு ஒரு  முகக்கவசம் வீதம் தொடர்ந்து 7 நாட்களுக்கு 8500 பணி யாளர்களுக்கும் மேற்கண்ட முகக்கவசம் வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை தூய்மைப் பணியாளர்களுக்கு 2 முறை மட்டுமே முகக்கவசம் வழங்கியதாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் பெற்றதையும் முறையாக வழங்கவில்லை என்று தெரிய வருகிறது. அப்படியானால் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கிய 60,000 முகக்கவசம் என்னவானது என்ற கேள்வியும் எழுகிறது?

மொத்தத்தில் கடந்த 84 நாட்களில் 2 நாட்களுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையிலான பாதுகாப்பு உபகரணங் களை வழங்கி விட்டு மார்தட்டிக்கொள்வதும் அதனை உயர்நீதி மன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டு மதுரை மாநகராட்சி நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்திருப்பதோடு, இதனை பிற மாநகராட்சிகளும் பின்பற்ற அறிவுறுத்தியிருப்பதும் ஏற்புடையதாக இல்லையே?

வழங்குவதை உறுதி செய்யாமல்...
மேலும், இவ்வழக்கில் மனுதாரர்கள் எழுப்பாத கோரிக்கை வரம்புகளைத் தாண்டி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதாவது மேற்கண்ட மனுதாரர்கள் தூய்மைப் பணியாளர்கள் போன்ற முன் களப்பணியாளர்கள் முகக்கவசம் அணிவதை கண்காணிக்க வேண்டும் என்று தான் முறையிட்டுள்ளனரே தவிர, அதன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து உத்தரவு பிறப்பிக்க கோரவில்லை. ஆனால், உயர்நீதிமன்றத்தின் மேற்கண்ட அமர்வோ மனுதாரர்களின் கோரிக்கையைத் தாண்டி தூய்மைப் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து வேலை செய்வதை சுகாதார மேற்பார்வையாளர்கள் தினசரி 3 முறை ஆய்வு செய்ய வேண்டுமெனவும், அவ்வாறு முகக்கவசம் அணிந்து வேலை செய்யாத தூய்மைப் பணியாளர்களை செல்போனில் படம்பிடித்து வாட்ஸ் அப் மூலம் மண்டல அலுவலருக்கு அனுப்பி நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

தூய்மைப் பணியாளர்கள் முகக்கவசம் அணிவதன் மூலம் அவர் களைப் பாதுகாக்க நினைக்கும் உயர்நீதிமன்றத்தின் அக்கறை வரவேற்கத்தக்கதே. அதே சமயத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு தினசரி முகக்கவசம் வழங்குவது உறுதி செய்யப்பட்டால் தான், அவர்கள் முகக்கவசம் அணிந்து வேலை செய்கிறார்களா என்பதை ஆய்வு செய்கின்ற பிரச்சனையே எழுகிறது. விநியோகத்தை உறுதிப்படுத்தாமல் அதற்கு பொறுப்பேற்க வேண்டிய அதிகாரிகளை விட்டு விட்டு,  தூய்மைப் பணியாளர்களாகிய அடித்தட்டு தொழிலாளி வர்க்கத்தைக் கண்காணிப்பு செய்யும் அதிகாரத்தை அதே  அதிகாரிகளிடம் ஒப்படைப்பதானது அதிகாரிகளின் ஒரு தலைப்பட்சமான, தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கே இட்டுச் செல்லும். எனவே, இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் மறு பரிசீலனை வேண்டும்.

போக்குவரத்து ஏற்பாடு 
இதே வழக்கில் மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தின் முன்னால் தூய்மைப் பணியாளர்கள் சம்பந்தமாக ஆயுள் காப்பீடு இணைப்பு, உணவு ஏற்பாடு, ஓய்வறை, போக்குவரத்து போன்ற அம்சங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.  ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஜூன் 1 வரையிலான 80 நாட்களும் காலை 6 மணிக்கெல்லாம் குப்பை வண்டியிலேயே ஏராளமானோர் வேலைக்குச் சென்றுள்ளனர். வேலை முடித்து மீண்டும் வீடு திரும்ப தனி  வாகனம் ஏற்பாடு செய்திட பலமுறை நிர்வாகத்திடம் பேசியும் கடைசி வரை அந்த தொழிலாளிகளின் கோரிக்கை ஏற்கப் படவே இல்லை. இதுபோல், நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பிலிருந்து பணித்தளத்திற்கு நடந்தே சென்று வேலை பார்த்து வந்துள்ளனர்.

மதுரை கிழக்கு ஒன்றியத்தில் உள்ள சக்கிமங்கலம் பகுதியிலிருந்து 300-க்கும் மேற்பட்ட தூய்மைப்பணி யாளர்கள் மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில் பணிபுரிய வந்து செல்கின்றனர். முதல் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 24 அன்றே சிஐடியு சங்கத்தின் சார்பில் நிர்வாகத்திடம் பேசி தொழிலாளிகளை அழைத்து வர அரசுப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. தனி மனித இடைவெளி போன்ற அம்சங்கள் எதனையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாத நிர்வாகம் அதற்கேற்ற எண்ணிக்கையில் பேருந்தை ஏற்பாடு செய்வதற்கு பதிலாக ஓப்புக்காக ஒரே ஒரு பேருந்தை மட்டுமே ஏற்பாடு செய்து அனுப்பியது. அவ்வாறு ஏற்பாடு  செய்யப்பட்ட பேருந்தில் 70 பேர் வரை தினசரி வேலைக்கு வந்து செல்லும் நிலை தான் இருந்தது.

ஆக தூய்மைப் பணி யாளர்களுக்காக இந்த அரசோ , மாநகராட்சி; நிர்வாகமோ போக்குவரத்து வசதிக்கான பொருத்தமான ஏற்பாடு செய்யவில்லை; மேலும் அவர்களை ஆட்டு மந்தைகளைப் போல் அழைத்துச் செல்லும் மனப்பாங்கானது இத்தொழி லாளிகளின் மீது அதிகார வர்க்கத்தின் சமூக ரீதியான மதிப்பீடுகளிலிருந்து தான் அவர்களுக்காக மேற்கொள்ளும் ஏற்பாடுகள் கூட செய்யப்படுகின்றன என்பதையும் புறக்கணிக்க முடியாது.

பல அடுக்கு அதிகார வர்க்கத்தின் ஒரே குணாம்சம்
இது மட்டுமன்று. கொரோனா கால தளர்வுகளற்ற ஊரடங்கு காலத்தில் தூய்மைப் பணியாளர்கள் உணவுக் காகவும், ஏன் தேநீருக்காகவும் கூட மிகவும் அல்லற்பட நேர்ந்தது. குடியிருப்பு பகுதிகளில் பணி செய்து கொண்டிருக் கும் வேளையில் தாகத்திற்கு தண்ணீர் பருகுவதற்கு கூட வீடுகளில் சென்று கேட்க முடியாத அளவுக்கு கொரோனா வைப் பற்றிய அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவியது தான் பெரும் கொடுமை. இவற்றைத் தாண்டி தூய்மைப் பணி யாளர்கள் குறிப்பாக பெண்கள் வேலை முடித்து ஓய்வுக்குப் பின் மீண்டும் வேலை செய்வதற்காக ஆயத்தமாவதற்கான இடைப்பட்ட நேரத்தில் தங்கி இளைப்பாறுவதற்கான ஓய் வறைகள் கிடையாது. பல இடங்களில் வார்டு அலுவலகங் கள் தான் ஒய்வறைகளாக உள்ளன.

அதனையும் அருகாமை யில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமே பயன்படுத்துவர். உதாரணத்திற்கு, இவ்வாறான பணிச்சூழல் இடருக்கு ஆட்பட்ட நிலையில் வேலை பார்த்த பெண் தூய்மைப் பணி யாளர்கள் தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த தங்கள் மேலதிகாரி யான சுகாதார ஆய்வாளரிடம் ஓய்வறை வசதி குறித்து கேட்ட தற்கு அவர் சொன்ன பதில் இது தான். உங்களுக்காக தனி யான அறையெல்லாம் பிடித்துக் கொடுக்க முடியாது. எங்கே வேலை பார்க்கிறீர்களோ அங்கேயே அமர்ந்து இளைப்பாறி விட்டு மீண்டும் வேலையை முடித்து விட்டுத் தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மனித உரிமையின் வாடை கூட அறியாதவராக இருந்துள்ளது மேற்கண்ட அதிகாரி யின் உத்தரவு. அந்தப் பெண்கள் இளைப்பாறுவது இருக் கட்டும்; அவர்கள் இயற்கை உபாதைகளுக்காக எங்கே செல்வார்கள்? அது குறித்து அந்த அதிகாரிக்கு இருக்கும் அக்கறை என்ன? இது அந்தக் குறிப்பிட்ட அதிகாரியின் மனோ நிலை மட்டுமல்ல. மாநகராட்சி , உள்ளாட்சி நிர்வாகத்தின் பல்வேறு அடுக்குகளில் உள்ள அதிகார வர்க்கத்தின் பொது வான குணாம்சமாகவே உள்ளது. இதுகுறித்தும் உயர்நீதி மன்றம் தன் விசாரணை வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்.

கொரோனா பாதிப்பும் - நிவாரணமும்
தூய்மைப் பணியாளர்கள் ஆற்றி வரும் இத்தகு அர்ப்பணிப்பு மிக்க கொரோனா கால பணியின் காரணமாக அவர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாவதும், சில இடங்களில் உயிரிழப்பதும் நிகழ்ந்துள்ளது.  இந்நிலையில் தமிழக அரசு சென்னையில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு 2 லட்சம் நிவாரணமும், ஒட்டு மொத்த சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு மதிப்பூதியமாக ரூ.2500-ம் வழங்கிட உத்தரவிட்டுள்ளது. இதனை தமிழகம் முழுவதற்கும் விரிவுபடுத்த வேண்டும். மதிப்பூதியத்தை இரட்டிப்பு சம்பளத் தொகையாக வழங்கிட முன் வரவேண்டும்.

எல்லாவற்றையும் விட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதைக் கட்டாயப்படுத்துவதோடு,குறிப்பாக தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் நிகழும் மரணங்கள் ‘சைலன்ட் ஹைப்பாக்சியா” வகைப்பட்டதா (இரத்தத்தில் ஆக்சி ஜன் பற்றாக்குறையினால் திடீர் மூச்சுத் திணறலும், மாரடைப்பும் ஏற்பட்டு நிகழும் மரணம்) என்பதையும் பரிசோதனை செய்திட வேண்டும். இதோடு ஆயுள் காப்பீடு திட்டத்தில் அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் இணைத்து அரசே அதற்குரிய கட்டணத்தை செலுத்தி அவர்களை நிரந்தரமாகப் பாதுகாப்பதற் கான நடவடிக்கை எடுப்பதையும் உயர்நீதிமன்றம் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

பாராட்டப்பட வேண்டியவர்கள் யார்?
மதுரை மாநகராட்சியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமான தூய்மைப் பணியாளர்கள் தமிழக அரசும் , மாநகராட்சி நிர்வாகமும் கொரோனா காலத்தில் கூட தம்மீது அநீதியான அணுகுமுறையைக் கைக்கொள்கின்றன என்பதை உணர்ந்திருந்தாலும், இந்த பேரிடர் காலத்தில் தான்  வாழும் சமுதாயத்தில் உள்ள சக மனிதர்கள் மீது உள்ள அன்பினா லும், நோய்த் தொற்றிலிருந்து அவர்களது உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற அக்கறையினாலும் கொரோனாவை எதிர்த்த போரில் முன் களப்பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

மருத்துவர்களையும், காவலர்களையும் விட -பாதகமான சூழ்நிலைகளில் வேலை பார்க்க நேர்ந்த போதும் அர்ப்பணிப்பு மிக்க களப்பணி ஆற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் பாராட்ட ப்பட வேண்டியவர்கள்; கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் அதிகாரிகளே என்பதை உயர்நீதிமன்றம் ஏற்று அதன் வழி உரிய உத்தரவுகள் பிறப்பிப்பதே தூய்மைப் பணியாளர்களின் உயிர் காத்திட எடுக்கும் நலன் பயக்கும் நடவடிக்கையாக இருக்கும்.

கட்டுரையாளர்: மாநில உதவிச்செயலாளர், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சம்மேளனம்(சிஐடியு)