tamilnadu

img

தொற்று நோய்களின் அரசியல் -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

கொரோனா வைரஸ் தொற்று குறித்து பல்வேறு நாடுகளிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் ஆளும் வர்க்கங்கள் மேற்கொள்ளும் திட்டங்கள், காலாவதியாகிப்போன நவீன தாராளமயக் கொள்கைகளிலும், மக்களைவிட லாபமே முக்கியம் என்கிற முதலாளித்துவக் கொள்கையை முன்வைப்பதிலும் இருக்கின்ற முரண்பாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றன.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தடை
அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்பு மேற்கொண்டதைப்போன்றே, தன்னுடைய கட்டளைகளை ஏற்காத நாடுகளுக்கு எதிராக மிரட்டல் மற்றும் வற்புறுத்தலைப் பயன்படுத்தும் போக்கைத் தொடர்கிறது. ஈரான் இந்நோயால் மிகவும் ஆழமான முறையில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையிலும் அங்கே ஒரு சுகாதார நெருக்கடி வளர்ந்திருக்கிற நிலையிலும்கூட, ஈரானுக்கு எதிராக தான் பிறப்பித்துள்ள பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா மறுத்து வருகிறது. இவ்வாறு சட்டவிரோதமான பொருளாதாரத் தடை மேற்கொள்ளப்பட்டிருப்பதன் காரணமாக, ஈரான் தன்னுடன் வர்த்தக உறவுகளைக் கொண்டிருக்கக்கூடிய மூன்றாம் உலக நாடுகளில் உள்ள மருந்துக் கம்பெனிகளிடமிருந்து மருந்துகளையோ, மருத்துவ உபகரணங்களையோ வாங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஏனெனில் அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்நாடுகளுடனும் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து மேற்கொள்ளக்கூடாது எனக் கட்டளை பிறப்பித்திருக்கிறது. 

வெனிசுலாவின் மதுரோவுக்கு எதிராக...
வெனிசுலாவைப் பொறுத்தவரை, பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிற பொருளாதாரத் தடையுடன் மட்டுமல்லாது, டிரம்ப் நிர்வாகமானது, ஜனாதிபதி மதுரோ மற்றும் அவருடைய அரசாங்கத்தின் சகாக்கள் மீது, கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் போதைப்பொருள் பயங்கரவாதக் (narco-terrorism right) குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறது. ஓர் இறையாண்மை மிக்க நாட்டின் தலைவரைப் படுகொலை செய்திட வெளிப்படையாகவே அழைப்பு விடுக்கும் விதத்தில், மதுரோவைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும்விதத்தில் தகவல்களை அளிப்பவருக்கு 15 மில்லியன் டாலர்கள் வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. அதுமட்டுமல்ல, அமெரிக்காவும், அதன் மேற்கத்திய கூட்டணி நாடுகளும், கொரோனா வைரஸ் நெருக்கடியைச் சமாளித்திட அவசர நிதி உதவி அளித்திட வேண்டும் என்கிற வெனிசுலாவின் வேண்டுகோளை நிராகரிக்கச் செய்யுமாறு பன்னாட்டு நிதி நிறுவனத்தை தடுத்துள்ளன.

சீனாவுக்கு எதிராக...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சீனாவைக் குறை கூறி மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்திற்கும் ஜனாதிபதி டிரம்ப் தலைமை வகித்தார். இதனை “சீன வைரஸ்” என்றே அழைத்தார். இந்த வைரஸின் அச்சுறுத்தல் குறித்து, காலத்தே தெரிவிக்கவில்லை என்றும் சீனா மீது குற்றம்சாட்டினார். அவர், சீனாவைத் தனிப்படுத்துவதற்காகவும், சீனாவுடனான பொருளாதார மற்றும் வர்த்தகப் போட்டிகளில் தன் பேரம்பேசும் நிலையை வலுப்படுத்திக்கொள்வதற்காகவும், இத்தொற்று நோயை இழிவானமுறையில் பயன்படுத்திக்கொள்ள டிரம்ப் முயன்றார். சுமார் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக சீனாவை ஏளனம் செய்த பின்னர், இப்போது தன் சொந்த நாட்டிலேயே கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள முடியாமல் விழிபிதுங்கியுள்ள நிலையில், டிரம்ப் நிர்வாகமானது அதே சீனாவிடமிருந்து மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதித்திருக்கிறது. என்னே வேடிக்கை விநோதம் பாருங்கள்! முகக் கவசங்கள், கவுன்கள் மற்றும் சோதனைக் கருவிகளுடன் தன்னுடைய முதல் விமானத்தை மார்ச் 29 அன்று நியூயார்க்கிற்கு சீனா அனுப்பி வைத்திருக்கிறது. இதேபோன்று அமெரிக்காவின் பல நகரங்களுக்கு மேலும் 21 விமானங்களை சீனா அனுப்ப இருக்கிறது.

கியூப மருத்துவக் குழுக்களுக்கு எதிராக...
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக, சீனாவை அச்சுறுத்தி அடாவடித்தனம் செய்யமுடியாத அதே சமயத்தில், அமெரிக்காவிற்கு வெளியே இதர நாடுகளிலுள்ள மக்களின் நலன்களுக்குப் பாதகம் ஏற்படும் விதத்தில் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள மிகக் கேவலமான நடவடிக்கையையும் பார்க்க முடிகிறது. கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக, கியூபா மருத்துவக் குழுக்கள் எதையும் ஏற்கக்கூடாது என்று இதர நாடுகளைக்கு அது தடை விதிக்கும் இழிமுயற்சிகளில் இறங்கி இருக்கிறது. ‘கியூப மருத்துவக் குழுக்கள் உங்கள் நாடுகளின் நலன்களுக்கு ஊறு விளைவித்திடும்’ என்று கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளை அமெரிக்கா ‘எச்சரித்து’க் கொண்டிருக்கிறது.

அமெரிக்கத் தொழிலாளிக்கும் எதிராக...
அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொறுத்தவரை அதற்குத் தன் மேலாதிக்கம்தான் முக்கியமே ஒழிய, மக்களின் சுகாதாரம் மற்றும் நலன்கள் குறித்து அதற்கு எவ்விதமான அக்கறையும் கிடையாது. 2008இல், உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அமெரிக்கா மற்றும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள், தங்கள் நாடுகளில் உள்ள கார்ப்பரேட்டுகள், வங்கிகள் மற்றும் நிதி முதலீட்டு நிறுவனங்களை நிதி நெருக்கடியிலிருந்து வெளிக்கொணர்வது என்பதற்கே முன்னுரிமை கொடுத்தன. இவர்களின் வர்க்கப் பாசம் வெளிப்படையாகவே தெரிகிறது. முதலாளிகளைக் காப்பாற்ற முனைந்த அதே சமயத்தில், தொழிலாளர்களின் நிலைமையோ அதிலும் குறிப்பாக தற்காலிக மற்றும் முறைசாராத் தொழிலாளர்களின் நிலைமையோ அதளபாதாளத்தில் இருக்கின்றன.

உதாரணமாக, அமெரிக்காவில் 2 டிரில்லியன் டாலர்கள் தொகுப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு, பல பில்லியன் டாலர்கள் கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்பட்டது. இது 2008இல் அளிக்கப்பட்டதைக் காட்டிலும் மிக அதிகமாகும். அதே சமயத்தில் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு தலா 1200 டாலர்கள் மட்டுமே ரொக்கப் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது மிகவும் அற்பத்தொகையாகும். இத்தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு எதுவும் கிடையாது. இவ்வாறு ரொக்கப் பரிமாற்றம் செய்திருப்பது பெரிய அளவில் கதவடைப்பு செய்யப்பட்டதைத் தடுத்திடவில்லை. சென்ற வாரம் 33 லட்சம் பேர் வேலையில்லாக் காலத்திற்கான நிவாரணம் கோரியிருந்தார்கள்.

சமூக-ஜனநாயகப் பாரம்பரியம் கொண்ட ஸ்காண்டிநேவியன் நாடுகள் மற்றும் ஒருசில ஐரோப்பிய நாடுகளில் மட்டும்தான், (முன்பு இருந்ததுபோல் இல்லாமல் மிகவும் அரிக்கப்பட்ட நிலை இருந்தபோதிலும்), தொழிலாளர்கள் கதவடைப்புகளிலிருந்து பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கம்பெனிகளால் அளிக்கமுடியாத ஊதியத்தை அந்நாட்டு அரசுகள் அளித்துக்கொண்டிருக்கின்றன. உதாரணமாக, டென்மார்க்கில், ஊழியர்களின் ஊதியத்தில் 75 சதவீதம் அரசாங்கத்தாலும், 25 சதவீதம் கம்பெனிகளாலும் அளிக்கப்படுகிறது. கிரேட் பிரிட்டனில் உள்ள கன்சர்வேடிவ் அரசாங்கமும் ஒரு விதிவிலக்காக, கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 80 சதவீத ஊதியத்தை அளித்துக் கொண்டிருக்கிறது. எனினும், தற்காலிக ஊழியர்களுக்கு உருப்படியான முறையில் எதுவும் கிடையாது.

வலதுசாரி அரசுகளின் அணுகுமுறை என்ன?
வலதுசாரி அரசாங்கங்கள் பலவற்றின் முதல் எதிர்வினை என்னவெனில், தங்கள் நாடுகளில் பொருளாதாரம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படாதிருப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பதேயாகும். அதனால்தான் அவை “மந்தை தடைக்காப்புநிலைநோய்” (“herd mmunity”) சிந்தனையைத் தழுவிக்கொண்டிருக்கின்றன. இதன் பொருள் என்னவென்றால், தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளைக் கடுமையாக எடுப்பதற்குப் பதிலாக, மக்களைத் நோய் தொற்றிக்கொள்ள ஆரம்பத்தில் அனுமதிப்பது; பின்னர் கணிசமான மக்கள் பிரிவினர், உதாரணமாக 80 சதவீத மக்கள் பிரிவினர் என வைத்துக்கொள்வோம், நோய்த் தொற்றுக்கு ஆளாகும்போது, நோய் எதிர்ப்பு சக்தியை மீட்க சிறிது நடவடிக்கை எடுப்பது. இவ்வாறு, சமூகம் வைரசிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறும். இந்த அணுகுமுறைக்கு சமூக முடக்கம், பெரிய அளவில் தனிமைப்பட்டிருத்தல் அல்லது இயல்பு நடவடிக்கைகளைச் செய்யாமல் சமூகரீதியாக தூர விலகியிருத்தல் போன்றவை தேவை இல்லை.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நெதர்லாந்தின் வலதுசாரிப் பிரதமர், இத்தாலியத் தலைமை மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் என அனைவருமே தத்தம் வழிகளில் இதே சிந்தனையைத்தான் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தங்கள் நாடுகளிலும் மக்கள் இவ்வாறு தொற்று நோய்க்கு ஆளாகும்போது இத்தகு சிந்தனையைக் கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். சென்ற வாரம் வரை டிரம்ப் என்ன சொல்லிக் கொண்டிருந்தார்? வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு முன்னுரிமை கொடுப்பதைவிட, பொருளாதாரத்தை நிலை நிறுத்துவது அவசியம் என்று வலியுறுத்திக் கொண்டிருந்தார். உலகில் உள்ள நாடுகளில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், சீனாவின் எண்ணிக்கையையும் தாண்டி அமெரிக்கா வேகமாக முன்னணிக்கு வந்தபின்னர்தான், தன் குரலை மாற்றிக்கொண்டு இப்போது மக்களைக் காப்பாற்றுவதற்கு முன்னுரிமை அளித்திட வேண்டும், அதன்பின்னர்தான் பொருளாதார நிலைமை குறித்துப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவ்வாறு அமெரிக்கா, மக்களின் நலனைவிட லாபமே முக்கியம் என்று கருதி மக்களைப் பேரிடருக்கு உட்படுத்தி இருப்பது, இப்போது உலகின் கண்களுக்கு முன் அப்பட்டமாக கொண்டிருக்கிறது.

அறிவு மங்கிய பிரேசில் ஜனாதிபதி 
டிரம்ப்பைப் போன்றே அவரின் அடிவருடியான பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சோனாரோவும் சொல்லிக் கொண்டிருந்தார். இந்த வைரசின் ஆழமான அச்சுறுத்தலை மறுப்பதைத் தொடர்கிறார். அவர், மக்களைத் தொடர்ந்து வேலை செய்ய அறிவுறுத்துவதும், அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்வதும் தொடர்கிறது. இவரது இத்தகைய பேச்சுக்களின் விளைவாக நாடு முழுவதும், உச்சநீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு முன்பும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. இவரது முரட்டுத்தனமான நடவடிக்கையின் விளைவாக மக்களின் கோபாவேசம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருநாளும் இவருக்கு எதிராக மக்கள் தங்கள் வீடுகளின் முன் பானைகளையும், பாத்திரங்களையும் தட்டி ஒலி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அறிவு மங்கிய இந்த பொல்சோனாரோவைத்தான் மோடி, இந்த ஆண்டின் குடியரசு தின அணிவகுப்புக்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். ஆனால், அந்த சமயத்தில் இவர், கொரோனா வைரஸ் குறித்து தான் கொண்டிருக்கும் இத்தகைய தன்னுடைய விநோதமான கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளவில்லை ஆனாலும் இவ்விரு எதேச்சதிகாரிகளுக்கும் இடையே பொதுவான அம்சங்கள் சில உண்டு. 130 கோடி மக்களையும் சமூக முடக்கம் செய்திட வேண்டும் என்று அறைகூவல் விடுத்ததும், அவர்களின் தினசரி நடவடிக்கைகளை மூன்றரை மணி நேர அறிவிப்பில் முடித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியதும் எதேச்சதிகார மனோநிலையிலிருந்து மட்டுமே வெளியாக முடியும். மேலும், இது அவரது முரட்டுத்தனமான வர்க்கக் கண்ணோட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. இது, தொழிலாளர் வர்க்கத்தின் மீது ஏவப்பட்டுள்ள யுத்தப் பிரகடனமாகும். 
“புலம்பெயர் உழைப்பு” (“migrant labor”) என்கிற சொற்றொடர் ஓரளவு தவறானதாகும். அவர்களில் பலர் உற்பத்தி, கட்டுமானம், விநியோகம் மற்றும் சேவைத் துறைகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களாவார்கள். அவர்களின் வேலைக்கு எவ்விதமான பாதுகாப்பும் கிடையாது, வேலையில்லாக் காலத்திற்கான உதவிகள் எதுவும் கிடையாது, உணவுப் பாதுகாப்பு கிடையாது, அவர்களின் குடும்பத்தினர் தங்குவதற்கு குடியிருப்பு வசதி கூட கிடையாது. மோடி தன்னுடைய உரையில் கேட்டுக்கொண்டதெல்லாம், வேலையளிப்பவர்களை, ‘தொழிலாளர்களை டிஸ்மிஸ் செய்யாதீர்கள்’, ‘அவர்களின் ஊதியங்களை வெட்டாதீர்கள்’ என்று பவ்யமாக போதனை செய்தது மட்டுமேயாகும். தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் கால்நடையாக நடக்கத் தொடங்கியபின், கடும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. அவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தங்குமிடங்களில் மந்தையாக அடைக்கப்பட்டார்கள், அல்லது மிகவும் பரிதாபகரமான நிலைமைகளில் தனிமைப்படுத்தப்பட்டனர், அல்லது மிகவும் மோசமான விதத்தில் தற்காலிக சிறைகளுக்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

முப்பது ஆண்டுகாலமாகப் பின்பற்றி வரும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்குப் பின்னரும், நாம் மிகவும் நலிவடைந்த நிலையிலேயே (கேரளா போன்ற சில விதிவிலக்குகள் தவிர) பொது சுகாதார அமைப்பைப் பெற்றிருக்கிறாம், அனைவருக்குமான பொது விநியோகமுறை இல்லாதிருக்கிறோம்; அடிப்படைச் சேவைகளுக்குப் பொதுப் பணத்தை செலவு செய்ய மறுக்கும் அரசாங்கங்களைப் பெற்றிருக்கிறோம் என்பதே எதார்த்தமாக இருக்கிறது. இந்தத் தொற்று நோய் அகற்றப்பட்ட பின்னர் உள்ள காலத்தில் நமக்கு முன்னுள்ள வேலை என்ன என்பது வரையறுக்கப்பட்டுவிட்டது. இப்போது ஆட்சியாளர்கள் பின்பற்றிவரும் நாசகர நவீனதாராளமயம் மற்றும் இந்துத்துவா கலவைக்கு எதிரான மாற்றுக்கொள்கைகளை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. இத்தகைய மாற்றுப் பாதையில் செல்வதற்கான போராட்டத்திற்கு இடதுசாரிகள் தலைமை தாங்க வேண்டியிருக்கிறது.
தமிழில்:  ச.வீரமணி