திரைப்பட கலைஞர் குஷ்பு காங்கிரசிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார். விலகியதற்காக சில காரணங்களையும் மதவாத கட்சியில் சேர்ந்ததற்கான சில காரணங்களையும் கூறியுள்ளார். இவை அனைத்துமே எள்ளி நகையாடக் கூடியது மட்டுமல்ல; கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமும் கூட! தமிழக மக்களால் திரைப்பட புகழின் உச்சிக்கு சென்ற குஷ்பு இன்று தமிழக மக்களின் எண்ணத்திற்கு மாறாக செயல்பட்டுள்ளார். தமிழக மக்களால் அவர் நிராகரிக்கப்படுவார் என்பதில் ஐயமில்லை.மாறுவது மனித இயல்புதான் என பா.ஜ.க.வில் சேர்ந்த பிறகு குஷ்பு கூறியுள்ளார். ஆம்! மாறுவது மனித இயல்புதான்! ஆனால் எத்தகைய மாற்றம் என்பதுதான் கேள்வி! தான் சார்ந்த தான் இன்னும் பற்றிக்கொண்டுள்ள சிறுபான்மை இஸ்லாமிய அடையாளத்தை ஒடுக்கியே தீருவது என செயல்படுகின்ற ஆர்.எஸ்.எஸ்.ன் வழிகாட்டுதலில் இயங்கும் பா.ஜ.க.வுக்கு மாறுவது பொருத்தமான மாற்றமா? தான் தீவிரமாக நேசிக்கும் பெண்ணியத்தை கோட்பாடு அடிப்படையில் மறுதலிக்கும் பா.ஜ.க.வுக்கு மாறுவது ஆரோக்கியமானதா? பின்னோக்கி நிகழும் மாற்றம் எப்பொழுதும் ஆபத்தானது!
“முட்டாள்களின்” இயக்கத்தில் சங்கமம்!
எத்தனையோ பிரபலங்கள் விட்டில் பூச்சிகளாய் பா.ஜ.க.வின் வலையில் வீழ்ந்துள்ளனர். ஆனால் குஷ்புவின் வீழ்ச்சி ஒப்பீட்டளவில் கூடுதல் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. அதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. குஷ்பு சிறந்த பேச்சாளராக உருவானார். சமீபத்தில் அரசியலுக்கு வந்த திரைக்கலைஞர்களில் வலுவாக அரசியல் கருத்துகளை முன்வைக்கும் திறமையை வளர்த்து கொண்டார். மாநில/ தேசிய அரசியல் நிகழ்வுகள் குறித்து தெரிந்து கொள்வதிலும் எதிர்வினையாற்றுவதிலும் தொடர்ந்து ஈடுபட்டார்.
குஷ்பு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர். நகத்கான் என்ற பெயருடைய அவர் மகாராஷ்ட்ராவில் பிறந்து தமிழகத்தை வந்தடைந்தார். சிறுபான்மை மக்களுக்கு எதிராக பா.ஜ.க. செயல்படுவதை கடுமையாக விமர்சித்தவர். 2017ம் ஆண்டு மோடியை விமர்சித்ததால் குஷ்பு ஒரு முஸ்லீம் என பலவகையில் சங்கிகள் டுவிட்டரில் இழிவுபடுத்தினர். அப்பொழுது குஷ்பு டுவிட்டரில் கீழ்கண்டவாறு பதிலளித்தார்:“சில ட்ரால்கள் நான் முஸ்லீம் எனவும் என் பெயர் நகத்கான் எனவும் கண்டுபிடித்துள்ளனர். முட்டாள்களே! அது எனது பெற்றோர் எனக்கு கொடுத்த பெயர். ஆம்! நான் (முஸ்லீம் பிரிவு) கான்தான்! அதற்கு என்ன இப்பொழுது?”
அந்த “முட்டாள்களின்” கட்சியில் சங்கமித்துள்ளார் குஷ்பு!
26.02.2020 தேதியிட்ட சி.ஏ.ஏ./என்.ஆர்.சி/என்.பி.ஆர் குறித்து குஷ்புவின் பேட்டி பற்றி கீழ்கண்டவாறு தினகரன் பத்திரிக்கை குறிப்பிடுகிறது:
“சிஏஏ, என்ஆர்சி, என்பிஆரை தடை செய்ய வேண்டும் என நடிகையும், காங்கிரஸ் பேச்சாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார். மதரீதியான பிரச்சனை ஆரம்பமாகி உள்ளது. குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக 60 நாட்களுக்கு மேல் போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டம் தொடர்பாக இதுவரை பதில் இல்லை எனவும் கூறியுள்ளார்.”
இப்பொழுது சி.ஏ.ஏ./என்.ஆர்.சி/என்.பி.ஆர் குறித்து என்ன சொல்வார் குஷ்பு? உண்மையை பேசும் தைரியம் அவருக்கு வருமா?
தான் பல நாட்கள் நன்றாக சிந்தித்த பிறகுதான் பா.ஜ.க.வில் சேர்ந்ததாக இப்பொழுது குஷ்பு கூறுகிறார். ஆனால் அவர் காங்கிரசில் இணைந்த பொழுது கீழ்கண்டவாறு கூறினார்:
“காங்கிரசில் சேர்ந்ததன் மூலம் சரியான முடிவைதான் எடுத்துள்ளேன் என்பதை நான் நன்கு அறிவேன்! அமெரிக்காவில் இருந்த ராகுல் காந்தியின் அறிவுரைகளை கவனித்து இந்த முடிவை எடுத்துள்ளேன். என்னுடைய தேசத்தின் எதிர்காலம் குறித்து எனது நம்பிக்கை வலுவடைகிறது.”
சந்தர்ப்பவாதம் எப்படியெல்லாம் பேச வைக்கிறது!
ஒரு டுவிட்டர் பதிவில் கீழ்கண்டவாறு பதிவிட்டிருந்தார்:
“சங்கிகள் மங்க்கிகள் (குரங்குகள்) போல நடந்து கொள்கின்றனர்.”
அந்தோ பரிதாபம்! அந்த குரங்குகள் கூட்டத்தில் தன்னையும் ஐக்கியப்படுத்தி கொண்டுள்ளார் குஷ்பு!
ஹத்ராஸ் குறித்து பேச தைரியம் வருமா?
உ.பி. ஹத்ராஸ் பாலியல் படுகொலை குறித்து மிக வலுவாக எதிர்வினை ஆற்றினார் குஷ்பு. ஊடக விவாதத்தின் பொழுது கீழ்கண்டவாறு பேசினார்:
“இந்த மண்ணின் இந்தியாவின் ஒரு மகள் மிகக்கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஏன் அந்த பெண்ணின் உடல் குடும்பத்தாரிடம் தரப்படாமல் அவசரம் அவசரமாக அதிகாலை 4 மணிக்கு எரிக்கப்பட்டது? ஏன் எவரும் அருகில் செல்ல அனுமதிக்கப்படவில்லை? ஏன் அந்த குடும்பம் பயமுறுத்தப்படுகிறது?” அதே போல பீகாரில் காப்பகத்தில் இருந்த பெண் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான பெண்ணுக்கு பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு தந்ததற்கும் கடுமையாக கண்டனம் தெரிவித்தார். இந்த கேள்விகளை எல்லாம் இப்பொழுது எழுப்பும் தைரியம் குஷ்புவுக்கு வருமா? இல்லை ராகுல் காந்தி எதிர்த்ததால் நானும் எதிர்த்தேன் என்று சொல்லப்போகிறாரா?
கடந்த 6ம் தேதிதான் ஒரு டுவீட்டுக்கு 2 ரூபாய் வாங்கி கொண்டு தான் பா.ஜ.க.வில் சேரப்போவதாக வதந்தி பரப்புகின்றனர் என குற்றம் சாட்டினார். ஆனால் இன்று பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டார். சமீபத்தில் காங்கிரஸ் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் மோடி குறித்து கீழ்கண்டவாறு பேசினார்:
“மயிலுக்கு உணவு தருகிறார்; புறாவுக்கு உணவு தருகிறார். ஆனால் மோடி அவர்களே! பட்டினியால் மனிதர்கள் மடிந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு எப்பொழுது உணவு தருவீர்கள்?”
இந்த கடுமையான விமர்சனம் முன்வைத்த ஒரு வாரத்துக்குள் பா.ஜ.க. பக்கம் தாவிவிட்டார் குஷ்பு! இது மிக மிக மோசமான சந்தர்ப்பவாதம் ஆகும்! தோசைக் கல்லின் மீது பாய்ந்த எலி சூடு தாங்காமல் அடுப்புக்குள் தாவிய கதையாக பா.ஜ.க. பக்கம் சென்றுள்ள குஷ்புவின் செயல் மிக மிக தவறான மதிப்பீடாக அமையும் என்பதே உண்மை நிலை!
பா.ஜ.க.வின் பகடைக்காய்கள்!
சில நாட்களுக்கு முன்பு ஒரு பா.ஜ.க. பிரமுகர் கீழ்கண்டவாறு டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்:
“தமிழ் திரையுலகின் கவர்ச்சி நட்சத்திரம் இணைய உள்ளார். இந்தி தெரிந்த அவர் பீகார் தேர்தலுக்கு செல்வார். முக்கியமாக தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராகவும் ஸ்டாலினுக்கு எதிராகவும் அவர் பயன்படுத்தப் போகும் வார்த்தைகள் அதிர்வுகளை உருவாக்க போகின்றன!”
பா.ஜ.க.வின் பல பகடைக்காய்களில் ஒன்றாக குஷ்பு மாறுவார் என்பது தெளிவு! தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்னும் பல பகடைக்காய்களை பா.ஜ.க. கைப்பற்றும் என்பதை அறிய அரசியல் அறிவு தேவை இல்லை. தன்னிடம் உள்ள ஆட்சி அதிகாரம்/ அரசியல் பலம்/ பண பலம்/ அரசு இயந்திரங்களை பயன்படுத்தி மிரட்டல்கள் ஆகியவற்றை பா.ஜ.க. மிருகத்தனமாக பயன்படுத்தும். எனினும் இத்தகைய எந்த செயல்களும் பா.ஜ.க.வின் நோக்கத்தை நிறைவேற்றப் போவது இல்லை. தமிழக மக்கள் அதற்கு இடம் தர மாட்டார்கள்.
பா.ஜ.க.வுக்கு தாவிய குஷ்புவின் செயல் எந்த விதத்திலும் தமிழக மக்களின் நலனுக்கு பயன்படப்போவது இல்லை! குஷ்புவுக்கு வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் பதவி அல்லது பலன் கிடைக்கலாம்! ஆனால் அதற்கு அவர் தரப்போகும் விலை மிகப்பெரியது! பா.ஜ.க.வுக்கு எதிரான மனோநிலையில் இருக்கும் தமிழக மக்களின் அபிமானத்தை குஷ்பு இழந்துவிட்டார்; மதமறுப்பு திருமணம் செய்ததால் முற்போக்காளர்களிடம் அவருக்கு ஆதரவு இருந்தது. அந்த ஆதரவையும் அவர் இழந்துவிட்டார். மதவாத கட்சியில் இணைந்ததால் சிறுபான்மை மக்கள் ஆதரவும் கிடைக்காது. பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்ததால் பெண்ணிய ஆதரவாளர்களிடம் இருந்த நல்லெண்ணமும் இனி கானல் நீராகிவிடும்! குஷ்பு எனில் நறுமணம் என பொருள்படும்! ஆனால் மதவாதம்/ பாலின சமத்துவம் எதிர்ப்பு/ சாதியவாதம் ஆகியவற்றை ஆதரிக்கும் அரசியல் துர்நாற்ற திசையில் நறுமணம் பயணித்தது பரிதாபகரமான ஒன்றுதான்!
===அ.அன்வர் உசேன்===