மதுரை,மே 9-மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை யில் மின்தடை காரணமாக 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக வெர்ணிகா மேரி, குரு சங்கர் ஆகிய இருவர் தனித்தனியே பொதுநல மனு தாக்கல் செய்தனர். அதில் கடந்த 7 ஆம் தேதியன்று மழை காரணமாக மின்தடை ஏற்பட்டதால் 5 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில், அன்றைய தினம் மதுரையிலுள்ள வேறெந்த மருத்துவ மனையிலும் இத்தகைய சம்பவம் நிகழ வில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்த விசாரணைக்கு வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைப்பதோடு, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.இந்த மனுக்கள் மீதான விசாரணை வியாழனன்று நீதிபதிகள் முன்பு நடை பெற்றது. அப்போது, இந்த சம்பவம் குறித்தநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். 5 நோயாளிகள் பலியானது குறித்து விளக்கம் கேட்டு மருத்துவக் கல்வி இயக்குனருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.