தேனி:
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லாதநிலையிலும் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுவதால் முல்லைப்பெரியாறு ,வைகை நீர்மட்டம் குறைந்து வருகிறது .இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேனி, மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை 526 கன அடியாக இருந்த நீர்வரத்து ஞாயிறன்று 385 கன அடியாக குறைந்து விட்டது. 1,389 கன அடி திறக்கப்படுகிறது .வைகை அணையிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், அணைக்கு சராசரியாக 1,000 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து கொண்டே வருகிறது. வடகிழக்குப் பருவமழையும் இந்தாண்டுஇதுவரை தொடங்காததால் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் தண்ணீர் பற்றாக் குறை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.அணைகளில் நீர்மட்டம்: வைகை அணை- 51.15 அடி. மஞ்சளாறு அணை-47.70 அடி,சோத்துப்பாறை அணை-118.90 அடி.