tamilnadu

img

தெலுங்கானா போக்குவரத்து ஊழியர்களை நசுக்குவதை நிறுத்துக- மாநில அரசுக்கு சிஐடியு கோரிக்கை

தெலுங்கானா மாநில அரசு, அம்மாநிலப் போக்குவரத்து ஊழியர்களை நசுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதை நிறுத்த வேண்டும் என்று இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) கோரியுள்ளது.

இது தொடர்பாக சிஐடியு சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் தபன் சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநிலப் போக்குவரத்துக் கழகத்தைக் காப்பாற்றிட, மாநில அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாநிலப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அக்டோபர் 5 அன்று தொடங்கிய வேலைநிறுத்தம் முழு வெற்றி பெற்றது.

போக்குவரத்துக் கழகம் தற்சமயம் நட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு அரசு அளித்திடும் பல்வேறு மானியங்களும், நாளும் அதிகரித்திடும் டீசல் விலை உயர்வும், ஜிஎஸ்டி திணிக்கப்பட்டிருப்பதும் ஒருசில காரணிகளாகும். நிச்சயமாக போக்குவரத்து ஊழியர்கள் அல்ல.

இவற்றைப்பற்றியெல்லாம் பரிசீலனை எதுவும் செய்திடாமல், மாநில அரசு, 48 ஆயிரம் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்திருக்கிறது. மேலும் போக்குவரத்துக் கழக சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கன்வீனர், வி. சீனிவாச ராவ் உட்பட இரண்டு கூட்டு கன்வீனர்களையும்,  தெலங்கானா மாநில சிஐடியுவின் நிர்வாகிகளையும் கைது செய்திருக்கிறது.  நட்டத்திற்கு ஊழியர்களே பொறுப்பு என்று குறைகூறி முதல்வர் தன் எதேச்சாதிகார அணுகுமுறையைக் காட்டிக் கொண்டிருக்கிறார், புதிய ஊழியர்களைத் தேர்வு செய்யப்போவதாகவும், அவ்வாறு புதிதாகச் சேர்கிறவர்கள் எந்தத் தொழிற்சங்கங்களிலும் சேரமாட்டோம் என்று எழுதித்தர வேண்டும் என்றும் மிரட்டிக்கொண்டிருக்கிறார்.  

போக்குவரத்துக் கழகத்தில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு பல தடவைகள் அரசிடம் எழுப்பியிருந்தபோதிலும், அவற்றுக்கு அரசு, செவி சாய்க்க மறுத்ததன் காரணமாக, கூட்டு நடவடிக்கைக் குழு செப்டம்பர் 6ஆம் தேதி வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்தது. தெலங்கானா மாநில அரசின் அலட்சிய மனப்பான்மையின் காரணமாகவே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

இத்தகைய மாநில அரசின் தொழிலாளர் விரோத, ஜனநாயக விரோத அணுகுமுறையை சிஐடியு கடுமையாகக் கண்டிக்கிறது. டிஸ்மிஸ் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களும் உடனடியாக மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று கோருகிறது. பிரச்சனைகள் குறித்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திட முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

போராடும் தெலங்கானா மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு  ஆதரவாகக் குரல் கொடுத்திட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களிலும் உள்ள போக்குவரத்துக் கழக ஊழியர்களையும் சிஐடியு அறைகூவி  அழைக்கிறது.

இவ்வாறு சிஐடியு தன் அறிக்கையில் கோரியுள்ளது.

(ந.நி)