tamilnadu

img

வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர் பலி

ஆழ்வார் குறிச்சி அருகே வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
தென்காசி மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சி அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து. 65 வயது நிரம்பிய இவர் தனது விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த கடையம் வனத்துறையினர் நேற்று இரவு அணைக்கரை முத்துவை அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணம் அடைந்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அணைக்கரை முத்துவின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் பிரேதப் பரிசோதனை முடிவு அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், மற்ற கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்குமாறும் கூறினர். இதையடுத்து சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.