tamilnadu

img

பந்தல் - டெக்கரேசன் தொழிலாளர்களுக்கு அரசு உதவுமா? தென்காசியில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

தென்காசி, மே 26- பந்தல் டெக்கரேசன்-ஷாமியான பந்தல் தொழிலாளர்கள் வாழ்வுரிமைக்காக கொரோனா நிவராண நிதியாக மாதம் ரூ.10,000 வழங்கிட கோரி மனு கொடுக்கும் போராட்டம் சிஐடியு சார்பில்  தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம்.வேல்முருகன் தலைமை வகித்தார். மனு கொடுக்க காவல்துறை அனுமதி மறுத்ததால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில்  வட்டாரத் தலைவர் லெனின்குமார், வட்டாரச் செயலாளர் கிருஷ்ணன், நிர்வாகிகள்                 கருப்பையா, தாணுமூர்த்தி, பந்தல் சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜ், உச்சிமாகாளி, கந்தசாமி, தங்கராஜ், ராஜா மற்றும் பந்தல் டெக்கரேசன்-ஷாமியான பந்தல் தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பந்தல் டெக்கரேசன்- சாமியான பந்தல் தொழில் பெரும்பாலும் திருவிழா மற்றும் முக்கிய சுபமுகூர்த்த நாள்களில் மட்டும்தான் நடைபெறும். கொரோனா பாதிப்பு காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமலில் நிலையில், எவ்வித விழாக்களும் நடத்த அனுமதியில்லை. இதனால் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.  200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டினியால் வாடும் நிலையை போக்கிடவும், கொரோனா நிவாரண நிதியாக மாதம் ரூ.10,000 வழங்கிடவும், தொழில் செய்திட பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்ல அனுமதி வழங்கிடவும், திருவிழாக்கள் மற்றும் இல்ல விழாக்களுக்கு உள்ள தடையை விலக்கி தொழில் செய்திட அனுமதி அளித்திடவும், தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த, செய்யாத அனைத்து தொழிலாளர்களுக்கும்  கொரோனா நிதி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.