tamilnadu

img

கயத்தாறு அருகே காலில் விழுந்து கும்பிடவைத்த சம்பவம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஓலைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ் என்பவரை சாதி ஆதிக்க சக்திகள் காலில் விழுந்து கும்பிட வைத்த சம்பவத்திற்கு சிபிஎம் தூத்துக்குடி மாவட்டக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :-

கயத்தாறு அருகே ஓலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். அதே ஊரை சேர்ந்த சிவசங்கு என்பவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனை மனதில் வைத்துக்கொண்டு பட்டியல் சாதியை சேர்ந்த பால்ராஜை சாதி ஆதிக்க சக்திகள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து அவமானப்படுத்தி அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இச்சம்பவத்திற்கு சிபிஎம் தூத்துக்குடி மாவட்டக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதில் சம்பத்தப்பட்ட சாதி ஆதிக்க சக்தியினர் அனைவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசையும், காவல்துறையையும் கேட்டு கொள்கிறோம் .