தூத்துக்குடி:
எட்டையபுரம் தாலுகா ரணசூர்நாயக்கன்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட அருந்ததிய குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கூலி வேலைசெய்து வருகின்றனர். அவர்களுக்கு வீட்டு மனை கேட்டு தொடர் போராட்டம் நடத்தியதன்மூலம் கடந்த 2005 ஆண்டு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது. பட்டா வழங்கி 15 ஆண்டு ஆகியும்இன்னும் அந்த மக்களுக்கு நிலம் ஒதுக்கப்படவில்லை. தொடர்ந்து விவசாயத் தொழிலாளர் சங்கம், சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், போராடியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தில் அருந்ததிய மக்களுக்கு கொடுத்த பட்டாவிற்கான நிலத்தை அளந்துகொடுக்க கோரியும், வீட்டுமனைஇல்லாத மக்களுக்கு வீட்டுமனை கேட்டும் கோவில்பட்டியில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கு.ரவீந்திரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், கிளை செயலர் ராமர், வைரவசாமி உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.