tamilnadu

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க அனுமதி இல்லை... 1ம் பக்கத் தொடர்ச்சி

அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதில்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ். அர்ச்சுணன் தாக்கல் செய்துள்ள மனுவையும்  (மனு  எண் 163 09 / 2019) உச்சநீதிமன்றம் இணைத்துக்கொண்டது. 

அரசின் கொள்கை முடிவுகள் குறித்து விசாரிக்க பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை என்றுகூறிய உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் எனத் தெரிவித்தது.உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். பல மாதங்கள் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டன.  தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், தில்லி மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன், மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.வைகை, என்.ஜி.ஆர்.பிரசாத், வைகோ,இ.சுப்பு முத்துராமலிங்கம், டி.மோகன், பாலன் அரிதாஸ், யோகேஸ்வரன் ஆகியோர் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த ஜனவரி  8 அன்று உத்தரவிட்டனர்.

வேதாந்தா கோரிக்கைகள் தள்ளுபடி
இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், வி. பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு ஆகஸ்ட் 18 அன்று காலை 10.30 மணிக்கு காணொலிக்காட்சி மூலம் தீர்ப்பளித்தனர். அதில்,   தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என்றும் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்துமனுவையும் தள்ளுபடி செய்தனர். உச்சநீதிமன்ற த்தில் மேல்முறையீடு செய்யும் வரை உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் அனைத்தும்தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஆலைக்கு மின் இணைப்பு தர வேண்டும்,குடிநீர் இணைப்பு தர வேண்டும் என்ற மனுக்களை யும் தள்ளுபடி செய்தனர்.உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அமர்வு 815 பக்க தீர்ப்பைவழங்கியது.  சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பால் தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து  கொண்டாடினர். தீர்ப்பின் முழு விவரம் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பேராசிரியர் பாத்திமா ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டுமென ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு சிப்காட்டில் வழங்கப்பட்ட நிலம் தொடர்பான வழக்குஉயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. ஆகவே பாத்திமா தாக்கல் செய்த மனுவில்தீர்ப்பு ஏதும் வழங்கப்படவில்லை. இந்த இரு வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

வழக்கறிஞர்களுக்கு பாராட்டு
இந்த வழக்கில் பொறுமையாக வாதாடிய வைகோ, வழக்கறிஞர்கள் இ.சுப்பு முத்துராமலிங்கம், ஆர்.வைகை, யோகேஷ்வரன், பூங்குழலி,அப்துல் சலீம், மாசிலாமணி, சி.எஸ்.வைத்தியநாதன், மோகன் உள்ளிட்ட பல வழக்கறிஞர்களுக்கு நீதிபதி பாராட்டுகளைத் தெரிவித்தார்.இந்தத் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வார்கள் என்பதால், கேவியட் மனுக்களை தாக்கல் செய்யவிருப்பதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மில்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ். அர்ச்சுணன் தாக்கல் செய்த வழக்கில்வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லான், இ.சுப்பு முத்துராமலிங்கம், என்.ஜி.ஆர்.பிரசாத், சீனிவாசராகவன். பர்வீன் பானு. வாமணன், கிஷோர், மோகன்காந்தி ஆகியோர் வாதாடினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
தீர்ப்பை வரவேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இதன் மீது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதாக வேதாந்த நிறுவனம் அறிவித்துள்ளது.இதுவரை நிலை நிறுத்தப்பட்ட சட்ட நிலையை உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு, வழக்கை எச்சரிக்கையாகவும், வாதங்களை உறுதியாகவும் முன் வைத்து, தூத்துக்குடி மாவட்ட மக்களின் ஆரோக்கிய வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள் ளார்.

;