தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில், தமிழ்நாட்டின் முதல் ராக்கெட் ஏவுதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் அமைக்கவுள்ள ராக்கெட் ஏவுதளம் ஆண்டிற்கு 24 ராக்கெட்டுகளை விண்ணிற்கு அனுப்பும் திறனுடையது.
அதுமட்டுமின்றி தூத்துக்குடியில் இன்று சுமார் ரூ.17,300 கோடி மதிப்பில் பிரதமர் தொடங்கி வைத்த திட்டங்கள்,
தூத்துக்குடி துறைமுகத்தில் வெளிதுறைமுக சரக்கு பெட்டக முனையம் அமைக்க, ரூ.124.32 கோடி மதிப்பீட்டில் 5 எம்.எல்.டி. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 எந்திரமயமாக்கல் ஆகியவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் உள்நாட்டு நீா்வழிக் கப்பலின் செயல்பாட்டை பிரதமா் தொடங்கி வைத்தார்.
ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை, மீன்சுருட்டி-சிதம்பரம் இருவழிப்பாதை, ஒட்டன்சத்திரம்- மடத்துக்குளம் நான்கு வழிச்சாலையைத் தொடங்கி வைத்தார்.
நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பிரிவின் இருவழிப் பாதை. ஜித்தண்டஹள்ளி-தருமபுரி நான்கு வழிச்சாலை திட்டங்களும் தொடங்கப்பட்டது.
10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 கலங்கரை விளக்கங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா வசதிகளையும் பிரதமா் தொடங்கி வைத்தார்.
வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் ரயில் பாதை, வாஞ்சி மணியாச்சி-திருநெல்வேலி பிரிவு மற்றும் மேலப்பாளையம்-ஆரல்வாய்மொழி பிரிவு உள்பட இரட்டை ரயில் பாதை திட்டங்களைப் பிரதமா் தொடங்கி வைத்தார்.
சுமார் ரூ.1,477 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த இரட்டை ரயில் பாதை திட்டம், கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் ரயில் பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்க உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் சர்பானந்தா சோனோவால், எல்.முருகன், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.