தூத்துக்குடி, மார்ச் 7- தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற “மீன்வளத் திருவிழா” கலைப் போட்டிகளில் வ.உ.சி. கல்லூரி அணி வெற்றி பெற்றது. தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இலக்கியத் துறை மாணவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த கலைவிழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 19 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர். தனிநபர் ஆடல் மற்றும் பாடல், ஓவியப்போட்டி, கோலப்போட்டி, விளம்பரயுக்தியை கையாளுதல், தனிநபர் நடனம், குழு நடனம், தனித்திறமை வெளிப்படுத்துதல், காகித ஆடை மற்றும் கழிவிலிருந்து கலை உருவாக்குதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு மீன்வளக் கல்லூரியின் முதல்வர் பா. சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்ட பிரியாமரைன் தலைமை நிர்வாக அதிகாரி தேவேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இப்போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி அணி முதல் பரிசு வென்று சுழற்கோப்பையையும், ரொக்கப் பரிசாக ரூ.5000 வென்றது. நெல்லை ம.தி.த. இந்துக் கல்லூரி, இரண்டாவது பரிசிற்கான கேடயத்தையும் மற்றும் ரொக்கப் பரிசாக ரூ.3000 வென்றது. இவ்விழாவில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.