தூத்துக்குடி, மே 26- தூத்துக்குடி மாவட்டம், முக்காணி உச்சினி மாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காசிராஜன்(29). இவர் ஆத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். திங்களன்று வேலைமுடிந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். முக்காணி ஆற்றுபாலம் அருகே வந்தபோது 2 பேர் அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் இல்லை என்று கூறியதால், மர்ம நபர்கள் காசிராஜனை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் ஆத்தூர் காவல் நிலையத்தில் செய்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வழக்குப் பதிந்து, முக்காணி அருகே சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பிரின்ஸ்(26), பொன்செல்வன் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.