தூத்துக்குடியில் 20 டன் எடையுள்ள ரேஷன் அரிசியை சட்டவிரோத விற்பனைக்காக கடத்திய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 20 டன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அந்தவகையில் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியில் ஒரு சரக்கு வாகனத்தில் சந்தேகத்திற்க்கிடமான முறையில் மூடைகளை ஏற்றிக் கொண்டிருப்பதை பார்த்து அங்கு சோதனை செய்ததில் ரேஷன் அரிசியை சட்டவிரோத விற்பனைக்காக சரக்கு வாகனத்தில் ஏற்றியது தெரியவந்தது.
அதேபோன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் பாலம் அருகே தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் சுமார் 15 டன் எடையுள்ள ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து சரக்கு வாகனத்தின் ஓட்டுநரான தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் கண்ணன்(30) மற்றும், லாரியின் ஓட்டுநரான கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (30) என்பவரையும் கைது செய்தனர். பின்னர் கண்ணனிடமிருந்து 5 டன் எடையுடைய ரேஷன் அரிசியும், ராஜசேகர் என்பவரிடமிருந்து சுமார் 15 டன் எடையுடைய ரேஷன் அரிசியும் மொத்தம் 20 டன் ரேஷன் அரிசி, சரக்கு வாகனம் மற்றும் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து தூத்துக்குடி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர்.