திருவாரூர், டிச.18- திருவாரூர் தாலுகா காவல் சரகம், சேந்தமங்கலம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த தீனா (எ) தினகரன், தந்தை பெயர் ரவிச்சந்திரன் என்பவர் திருவாரூர் தாலுகா காவல் சரகத்தில் பல்வேறு அடிதடி மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவர் மீது பல வழக்குகள் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது. மேலும் இவர் திருவாரூர் தாலுகா காவல் நிலைய தொடர் குற்ற சம்பவத்தில் ஈடுபடும் ரவுடி (எச்.எஸ் ரவுடி) ஆவார். இந்த நபர் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த காரணத்தினால், அவன் மீது சட்டப்பிரிவு 110 கு.வி.மு.ச பிரிவின் கீழ் கடந்த 10.11.2019 அன்று திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் நடவடிக்கை மேற்கொண்டு திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர், தீனா(எ) தினகரனிடம் இரண்டு ஜாமீன்தார் முன்னிலையில் கடந்த 11.11.2019 அன்று முதல் ஒரு வருட காலத்திற்கு அவர் நன்னடத்தையுடன் செயல்பட வேண்டும் என பிணைப்பத்திரத்தில் கையொப்பம் செய்துள்ளார். இந்நிலையில் குற்றவாளி தீனா(எ)தினகரன் கடந்த 18.11.2019 அன்று மீண்டும் ஒரு பிரச்சனையில் ஈடுபட்ட நிலையில் அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது திருவாரூர் தாலுகா காவல் நிலைய வழக்கு பதிவு செய்து, பின்னர் திருவாரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகப்பட்டினம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு வருட கால நன்னடத்தை பிணைப்பத்திரம் நிலுவையில் இருந்து வந்த காலக்கட்டத்தில் அதனை மீறி மீண்டும் ஒரு அடிதடி செயலில் ஈடுபட்ட காரணத்தினால் திருவாரூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் பரிந்துரையின் பேரில் மீண்டும் விசாரணை செய்த திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர், தீனா(எ)தினகரன் பிணைப் பத்திரத்தினை மீறியதால் பிணைப்பத்திர காலம் முடியும் வரை (10.11.2020) சிறைக்காவலில் வைக்கவும் ரூ.1000 அபராதம் செலுத்தவும் குறிப்பிட்டு டிச.16 அன்று செயல்முறை ஆணை பிறப்பித்துள்ளார். இந்த ஆணையை திருவாரூர் தாலுகா காவல் ஆய்வாளர் மூலம் மேற்படி தீனா(எ)தினகரனுக்கு சார்வு செய்யப்பட்டு அவர் டிச.17 அன்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.