tamilnadu

img

ரேசனில் உணவுப் பொருட்களை கூடுதலாக வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

குடவாசல், அக்.19- திருவாரூர் மாவட்டம் குடவாசல் நகரப் பகுதியில் உள்ள ரேஷன் கடை முன்பாக இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து மளிகை பொருட்களும் மலிவு விலையில் வழங்க வேண்டும். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அளவை உயர்த்தி தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். அனைத்து வேலை நாட்களிலும் அனைத்து பொருட்களும் ஒன்றாக வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கே.சசிகலா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கே.ஜெகதீஷ்வரி முன்னிலை வகித்தார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.கோமதி கோரிக்கைகளை விளக்கிப் பேசி கண்டன உரையாற்றினார்.
தரங்கம்பாடி
நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் இலுப்பூர் ரேசன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க வட்டச் செயலாளர் டி.ஆர்.ராணி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஜி.கலைச்செல்வி, வட்டக்குழு உறுப்பினர்கள் பார்வதி, ஜெயலெட்சுமி ஆகியோர் உரையாற்றினர். திருவிளையாட்டம் அங்காடி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜி.வெண்ணிலா தலைமை வகித்தார். கொத்தங்குடியில் வட்டக்குழு உறுப்பினர் கமலி தலைமையிலும், சங்கரன்பந்தலில் பார்வதி, டி.மணல்மேடு கிராமத்தில் துணை செயலாளர் குணசுந்தரி தலைமையிலும்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டத்தலைவர்  ஷண்முகவள்ளி மற்றும் வட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  மேலும் பி.பி.நல்லூர்,ஆயப்பாடி,ஆக்கூர் முக்கூட்டு, திருக்கடையூர், காட்டுச்சேரி, தில்லையாடி, திருவிடைக்கழி ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.