tamilnadu

img

திருவாரூரில் கழிவு நீர் கலந்த குடிநீரால் மக்கள் கடும் பாதிப்பு சிபிஎம் முயற்சியால் துரித நடவடிக்கை

திருவாரூர், மார்ச் 14- நூற்றாண்டைக் கடந்த சிறப்புமிக்க திருவாரூர் நகராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள், கழிவு நீர் கலந்த குடிநீரை பருகியதால் வாந்தி, பேதி நோய்க்கு ஆளாகி அரசு மற்றும் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றளவும் இதே நிலை நீடித்து வருகிறது. கடந்த 10 ஆம் தேதி முதல் மக்கள் இந்த இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.  கடந்த 11 ஆம் தேதியன்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திருவாரூர் வருகை தந்திருந்த நிலையில் இது பற்றி அறிந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை நலம் விசாரித்தார். மேலும் சிறந்த சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை கேட்டுக் கொண்டார். அத்துடன் உடனடியாக உள்ளாட்சித் துறை அமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது குறித்து பேசி துரித நடவடிக்கை எடுக்க கோரினார். இதன் காரண மாக அரசின் உத்தரவின் பேரில் திருவாரூர் நகராட்சி ஆணையர் சங்கரன் பொது சுகாதாரத் துறை, சுகாதாரத் துறை, குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள், அலுவலர்கள் ஒருங்கிணைந்து துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வாந்தி, பேதி நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிகாரிகள் தொடர் நடவடிக்கையில் மேற்கோண்டு வரு கின்றனர்.

சிபிஎம் தலைவர்கள் ஆய்வு
இதன் தொடர்ச்சியாக மார்ச் 14-ல் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், நகர செயலாளர் எம்.பாலசுப்ரமணியன் ஆகியோர் திருவாரூர் நகராட்சி பகுதிகளில் ஆய்வுப் பணி யினை மேற்கொண்டனர். மடப்புரத்திலுள்ள குடிநீர் நீரேற்று மற்றும் வழங்கல் நிலை யத்தையும், கழிவு நீர் கலந்த குடிநீரால் பாதிக் கப்பட்ட துர்காலயா ரோடு, காமாட்சியம்மன் கோவில் தெரு, நல்லப்பா நகர், கள்ளர் தெரு, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மக்களை சந்தித்து குறை களை கேட்டறிந்தனர்.  ஆங்காங்கே நடைபெற்று வரும் நகராட்சி பராமரிப்பு பணிகளையும், டேங்கர் லாரிகள் மூலமாக மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதை யும் கண்காணித்து ஆய்வு செய்தனர். நிறை வாக நகராட்சி ஆணையர் எம்.சங்கரனை நேரில் சந்தித்து தற்போதைய நிலையை கேட்ட றிந்தனர். அப்போது சிபிஎம் தலைவர்களுடன் நகராட்சியின் நடவடிக்கை குறித்து பேசிய ஆணையர், நகராட்சி பகுதிகளில் முற்றிலு மாக தற்போது குடிநீர் வழங்குவது நிறுத்தப் பட்டுள்ளது. கழிவு நீர் கலந்ததாக கூறப்ப ட்டுள்ள குடிநீர் ஆய்விற்கு அனுப்பியுள்ளோம்.  ஆய்வு முடிவின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிர மங்களை போக்கி விடுவோம். தற்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து முற்றிலுமாக தர பரிசோதனை முடிந்த பிறகு நீர்த்தொட்டியில் இருந்து நீரை விநி யோகம் செய்ய இருக்கிறோம். அதுவரை மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துக் கொண்டு நோய் தொற்று ஏற்படாத வண்ணம் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். சிபிஎம் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் வருகை தந்த பிறகு நடைபெறும் நகராட்சியின் துரித பணிகள் குறித்து சிபிஎம் தலைவர்கள் பாராட்டியதோடு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு நோய் தொற்று மற்றும் வாந்தி பேதியால் உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் கவனமாகவும, தொடர்ச்சி யாகவும் நகராட்சி நிர்வாகம் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

செயலற்ற குடிநீர் திட்டங்கள்- நிர்வாகம்  
கடந்த 10-ஆம் தேதியன்று கழிவுநீர் குடிநீரின் காரணமாக பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டு நூற்றுக்கணக்கில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். தொடர்ச்சியாக பலரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினாலும் சிலர் தொடர் சிகிச்சை யில் உள்ளனர். தற்போதுவரை கூட இந்த பாதிப்புகள் நீடித்து பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதைய தட்பவெட்ப நிலை மாற்றத்தால் நிகழ்கிறதா என்ற கேள்வி எழுகிறது.  நகராட்சி குடிநீரின் சுகாதாரமற்ற தன்மை குறித்து உறுதி செய்யப்படாத நிலையில் கடந்த சில தினங்களாகவே திருவாரூர் நகராட்சி பகுதி, கூத்தாநல்லூர், அடியக்கமங்கலம், அலி வலம், காக்கழனி என பல்வேறு பகுதிகளிலும் வாந்தி பேதி என்று மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்களை தவிர்த்து தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருபவர்களையும் கணக்கில் கொண்டால் நூற்றுக்கணக்கில் பாதிக்கப்பட் டுள்ளது தெரியவருகிறது. பாதாள சாக்கடை குழாய்கள், குடிநீர் குழாய்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்து இருப்பதால் எந்த இடத்தில் எப்படிப்பட்ட உடைப்பு ஏற்பட்டுள்ளது, கழிவு நீர் கலந்து உள்ளது என்ற விபரங்கள் இதுவரை வெளியி டப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வினை மேற்கொண்டார். இந்த நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், நிரந்தரமான முறையில் சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்கான திட்டங்கள் உள்ளாட்சி அமைப்பில் இல்லாததும் செயலற்ற நிர்வாகம் மக்களை அபாயக் கட்டத்தில் தள்ளியுள்ளது.

அதிகாரிகளின் மெத்தனப் போக்கு 
கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் அதன் செயல்பாடுகள் முடங்கி போய் இருந்தது. குறிப்பாக திருவாரூர் நகராட்சிக்கு இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை. மக்கள் பிரதிநிதி களும் இல்லை. இதன் காரணமாக கேள்வி கேட்பதற்கு ஆளில்லாத நிலையில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே மெத்தனப் போக்கு இருந்து வருகிறது. அரசிட மிருந்து நிதி வருவதில்லை. குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கான பொருட்கள் வாங்கப்படுவதில்லை. கொசு ஒழிப்பு சாதனங்க ளோ சுகாதார மேம்பாட்டு சாதனங்கள் இல்லை. இருந்தாலும் அவை பயன்படுத்தப்ப டாமல் நகராட்சி வளாகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும். ப்ளிச்சிங் பவுடர் போன்றவை அமைச்சர்கள் யாராவது வந்தால் அவர் போகின்ற பாதையில் தெளிக்கப்படுவது மட்டுமே நகராட்சி நிர்வாகம் நடைமுறையாகக் கொண்டுள்ளது. சாக்கடை தூர்வாருதல், பாதாள சாக்கடை குழாய்கள் பராமரிப்பு என்ற எந்த நடவடிக்கை யும் மேற்கொள்வதில்லை. இதுபோன்ற பேரிடர் ஏற்படும் போதும் மட்டும் ஊடக வெளிச்சத் தால் அவை வெளியாகும் போது ஒரு சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அதன் பிறகு பழைய நிலையே ஏற்படுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழலில் பாதிக்கப்பட்ட கமலாம்மாள் பகுதியில் வசித்து வரும் கட்டிடப் பணி செய்து வரும் ஸ்ரீதர் கூறும் போது, தனது மனைவி கவிதா(42), மகள் நந்திதா (16) ஆகியோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். சிகிச்சைக்கிடையில் மகள் நந்திதா பதி னொன்றாம் வகுப்பு பொருளாதாரம் தேர்வு எழுதியுள்ளார். இன்னமும் உடல் நிலை சரியாகவில்லை என்ற விவரங்களை தெரிவித்தார். மேலும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பல மாதங்களாக பராமரிக் கப்படவில்லை. நீரில் குளோரின் பவுடர் சேர்க்க வில்லை. நகராட்சி நிர்வாக செயல்பாடு அலட்சியமாக உள்ளதுஎன்றார்.

முடங்கிய நிலையில் நகராட்சி நிர்வாகம்  
நகராட்சியின் தற்போதைய நிலைகுறித்து முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் எஸ்.என்.அசோகன், ஜி.வரதராஜன் ஆகியோரைச் சந்தித்து கேட்கப்பட்டது. எஸ்.என்.அசோகன் கூறும்போது, பொதுவாகவே நகராட்சி நிர்வாக செயல்பாடு என்பது தற்போதைய நிலையில் முடங்கி கிடக்கிறது. 1972 ஆம் ஆண்டு கலை ஞர் முதல்வராக இருந்த போது தான் மடப் புரத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி முதன் முதலாக திறந்து வைக்கப்பட்டது. அம்மையப்பனில் இருந்து கொண்டு வரும் நீர் இத்தொட்டியில் நிரப்பப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு நகராட்சியின் உள்ள 11 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  சந்தைப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாகத்தின் கீழுள்ள நீர்த்தேக்கத்தொட்டியிலிருந்தும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுவதால் அம்மை யப்பனில் இருந்து தண்ணீர் எடுப்பதை நிறுத்தி விடலாம் என சிலர் முயற்சித்தனர். ஆனால் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டுவிட்டால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் கலைஞர் அரசு மடப்புரம் நீர்தேக்கத் தொட்டியின் மூலம் தொடர்ந்து நீர் விநியோகம் செய்து வந்தது. இது ஒருபுறம் இருக்க நகராட்சியில் குடிநீர் குழாய் பராம ரிப்பாளர்கள் (பிளம்பர்) 8 பேருக்கு இரண்டு பேர் மட்டுமே உள்ளனர்.  தற்போதுள்ள வளர்ச்சிப் போக்கில் தேவையான துப்புரவு பணியாளர்கள் இல்லை. ஏற்கனவே இருந்த 270 பேரில் 80 பேர் மட்டுமே துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேற்பார்வையாளர் 8 பேருக்கு இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். 6 சுகாதார ஆய்வாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே உள்ளார். இத்தகைய காரணங்களாலும் திருவாரூர் நகராட்சி நிர்வாகம் பாழ்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். குடிநீர் குழாய்கள், பாதாள சாக்கடை குழாய்கள் போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து இது போன்ற அவலநிலை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றார்.

தனியார் நிறுவனங்கள் 
ஜி.வரதராஜன் தெரிவிக்கும்போது, தனியார் நிறுவனங்களை வைத்து பாதாள சாக்கடை இணைப்பு வழங்க சொல்லும் பொழுது பல்வேறு இடங்களில் குடிநீருக்கான இணைப்பை அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் கழிவு நீரும், குடிநீரும் கிடைக்கின்ற ஒரு அபாயகரமான சூழல் இருக்கிறது. குறிப்பாக என்னுடைய குடிநீர் இணைப்பு சாக்கடைகள் கலப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி அவர்களுக்கு எழுத்துபூர்வமாக கொடுத்தும் கூட இதுவரை அது சரி செய்யப்படவில்லை. இதுவே முறையற்ற நகராட்சி நிர்வாகத்தி ற்கு முன்னுதாரணமாக உள்ளது. இதுபோன்ற பல்வேறு இடங்களில் சாக்கடை கழிவுநீர் பகுதியை கடந்து தான் குடிநீர் குழாய்களை வரு கின்ற நிலை என்பது இருக்கிறது. இதுதான் மிகப்பெரிய ஆபத்தான நிலை. திருவாரூரில் வசிக்கின்ற மக்களுக்கு இரண்டு வேளையும் பாதுகாப்பான குடிநீர் இதுவரை கிடைக்கிறதா அல்லது தேவையான குடிநீர் கிடைக்கிறதா என்றால் இல்லை என்பது தான் எதார்த்தமான உண்மை.  திருவாரூர் முழுக்க அடித்தட்டு மக்கள் வசிக்கின்ற பகுதிகளிலும், சாமானியர்கள் வசிக்கின்ற பகுதிகளிலும் மொத்தம் 110-க்கும் மேற்பட்ட சிறு மின்விசை பம்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி என திருவா ரூரில் மூன்று இடங்களில் தண்ணீர் கொடுக்கப்பட்டு கொண் டிருக்கி ன்றன. இந்த தண்ணீர் எதுவும் பாதுகாக்கப்படுகி றதா? அல்லது மக்கள் குடிக்கின்ற வகையில் அதன் தரம் இருக்கிறதா என்பது ஆதாரப்பூர்வமாக, அறிவியல்பூர்வமாக நகராட்சி ஆய்வு செய்யப்படவில்லை. திருவாரூர் மையப் பகுதியில் ஓடிக் கொண்டி ருக்கின்ற திருவாரூர் வாய்க்கால் என்பது இன்னைக்கு முற்றிலுமாக கழிவுநீர் செல்கின்ற ஒரு பாதையாக மாறி விட்டது. திருவாரூரில் பல்வேறு குடிநீர் இணைப்புகள் இந்த வாய்க்காலை கடந்துதான் செல்லுகின்ற நிலையும் இருக்கிறது. அப்படி செல்லு கின்ற போது அந்த குடிநீர் குழாயிலி ருந்து தான் மக்கள் தண்ணீரை பிடித்து பயன்படுத்துகின்ற நிலை இருக்கிறது. இதுவும் இன்னைக்கு நோய் தொற்றுக்கு ஒரு மிகப்பெரிய காரணமாக இருக்கும்.  உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் எதுவும் முழுமையாக பராமரிக்கப்படுவ தில்லை. மாதம் இரண்டு முறை இவை சுத்தம் செய்யப்படுவதில்லை. அதற்கான பரா மரிப்பு நபர்கள் இல்லை. இப்படியும் ஒரு பக்கம் உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இருக்கின்றன. தனியார் தண்ணீர் நிறுவ னங்களை நீதிமன்றம் முடக்கி இருக்கின்ற இந்த நேரத்தில் திருவாரூரில் பாதுகாப்பில்லாத நகராட்சித் தண்ணீரை குடிக்க முடியாத சூழலில் மக்கள் குடிதண்ணீருக்கு மிக நெருக்க டியை சந்தித்து இருக்கின்றனர். இந்த நேரத்தில் தனியார் தண்ணீர் நிறுவனங்கள் தன் இஷ்டம் போல் தண்ணீரை விலை வைத்து வைக்கின்ற ஒரு அவல நிலையும் நீடித்து வருகிறது. உட னடியாக இதையும் சரி செய்கின்ற ஒரு முயற்சியை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் ஈடுபட்டு ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.  அனைத்து பாதாள சாக்கடை குழாய்களும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு திருவாரூர் பகுதி யில் வசிக்கின்ற அனைவருக்கும் பாது காப்பான குடிதண்ணீரை தர உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

தரமான குடிநீர் வழங்குவதை உறுதிபடுத்த வேண்டும்
நிறைவாக கடந்த 10 ஆம் தேதியன்று வாந்தி பேதி நோயால் தொற்றிக் கொண்ட பரபரப்பு திருவாரூர் பகுதியில் இன்னமும் அடங்கவில்லை. சிபிஎம் மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்ததாலும், சிபிஎம் தலைவர்க ளின் தொடர் கண்காணிப்பினாலும் தற்போது உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. ஆனா லும் நிலைமை விபரீதமாகவே உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தரமான குடிநீர் வழங்கு வதை உறுதிபடுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் குடிநீர் உற்பத்திநிலைய முதலாளிகள் தங்களின் கோபத்தை மடைமாற்றி நகராட்சி குடிநீரை தரமற்றதாக மாற்ற சதி வேலைகளின் ஈடுபட்டி ருக்கலாம் என மக்களிடம் கருத்துகள் நிலவுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள வேண்டும். வாந்தி பேதியினால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கையை மக்களிடம் தெரியப்படுத்து வதுடன் விழிப்புணர்வு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். ஒரு சில நாட்கள் மட்டும் நடவடிக்கை எடுத்து விட்டு பின்னர் கைவிரித்து விடுவது நல்லதல்ல. தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு மக்களின் உயிர் ஆதாரமாக விளங்கக் கூடிய குடிநீரை தரமானதாக வழங்கிட மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.  உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்பாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு மக்களின் அடிப்படை உரிமையான குடிநீரை உறுதிப் படுத்த வேண்டும். ஒரு சில தினங்களில் நிலைமை சீரடையாவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட வேண்டி வரும் என சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.

;