tamilnadu

img

திருநள்ளாறு கோயிலில் ரூ.50 லட்சத்தில் தரை தளப் பணி

மன்னார்குடி, செப்.21-  காரைக்கால் மாவ ட்டம் திருநள்ளாறு தர்பார ண்யேஸ்வரர் கோயிலில் தரை தளத்தில் கருங்கற்கள் பதிக்கும் பணி தொடங்கியது. திருநள்ளாறில் உள்ள சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய புகழ்பெற்ற பிரணாம்பிகைசமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இக்கோயிலில் சோழர் காலத்தில் இருந்தது போன்று பழமையை மீட்டெடுக்கும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கோயில் பிரகார சுற்றுச்சுவர், சன்னதிகளுக்கு செல்லும் வழி உள்ளிட்ட இடங்களில் பூசப்பட்டிருந்த வண்ணப்பூச்சு, சிமெண்ட் பூச்சு, பதிக்கப்பட்டிருந்த மார்பிள் கற்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, கருங்கற்களும் கல்வெட்டுகளும் தெரியும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோயில் உட்புறத்தில் சில இடங்களில் கருங்கல் தளமாகவும், சில பகுதிகள் சிமெண்ட் தளமாகவும் உள்ள நிலையில் அனைத்துப்பகுதிகளிலும் கருங்கற்கள் பதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்து கும்பாபிஷேகத்துக்கு முன்பு சில இடங்களில் கருங்கற்கள் பதிக்கப்பட்டன.  தற்போது பெங்களூருவைச் சேர்ந்த பிரசாந்த் நாராயணன் என்ற  பக்தர் கோயில் பிரகாரத்தில் கருங்கல் பதிக்கும் செலவை ஏற்று ரூ.50  லட்சம் மதிப்பிலான கருங்கல் சிலாப்புகளை  அனுப்பியுள்ளார். இதையடுத்து 3வது பிரகாரத்தில் கருங்கல் பதிக்கும் பணி நேற்று தொடங்கியது.  இந்த பணியை ஆட்சியரும்  கோயில் தனி அலுவலருமான ஏ.விக்ராந்த் ராஜா தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி(கோயில்கள்) எஸ்.சுபாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்பணி ஒரு மாதத்திற்குள் நிறைவடையும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.