tamilnadu

திருவள்ளூர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம் முக்கிய செய்திகள்

அரசு மருத்துவமனையில்  10 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் டேங்க் அமைப்பு
செங்கல்பட்டு, ஜூலை 25- செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவில் ஆக்சிஜன் டேங்க் அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தினமும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. மருத்துவமனை தொடங்கிய தில் இருந்து தினம் சிலிண்டர் ஆக்சிஜன் வரவழைத்து பயன்படுத்திவந்தனர். பின்னர் 2ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் நோயாளிகளின் வருகை அதிகரித்ததை உணர்ந்த மருத்துவமனை நிர்வாகம், ரூ. 7.5 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள பெரிய சிலிண்டர் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது.  இதன் துவக்க விழா புதனன்று (ஜூலை 24) நடை பெற்றது. மருத்துவக் கல்லூரி முதல்வர் உஷா சதாசிவன் தலைமை தாங்கி ஆக்சிஜன் பிளாண்ட்டை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு கோட்டாட்சியர் செல்வம், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஹரிகரன், மயக்கவியல் துறைத் தலைவர் மாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கொள்ளையனை கம்பத்தில் கட்டிவைத்த பொது மக்கள்
செவ்வாப்பேட்டை, ஜூலை 25-  வேப்பம்பட்டை அடுத்த விநாயகபுரத்தை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் அதே பகுதி சி.டி.எச். சாலையில் ஹார்டு வேர்ஸ் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சொந்த ஊரான திருச்சிக்கு சென்றுள்ளார். இதையடுத்து வீட்டில் நந்தகுமாரும், அவரது தாய் லோகம்மாளும் இருந்தனர். இந்நிலையில் வியாழனன்று (ஜூலை 25) இருவரும் வீட்டை பூட்டிவிட்டு கடையை திறக்கச் சென்றனர். பின்னர் லோகம்மாள் மட்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து திறந்து கிடந்தது. சந்தேகம் அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர் ஒருவர் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த வாலிபர் லோகம்மாளை தாக்கி விட்டு  தப்பிச்செல்ல முயன்றார். அவர் கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையனை மடக்கி பிடித்தனர். பின்னர் அவனை கம்பத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்த னர். அவன் திருநின்றவூரைச் சேர்ந்தவன் என்று தெரிகிறது. இதுபற்றி வேப்பம்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கொள்ளையனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவனிடம் இருந்து ரூ.16 ஆயிரம் மற்றும் 5 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

போலி மதுபானம் தயாரித்தவர் கைது
மாமல்லபுரம், ஜூலை 25- கூவத்தூரை அடுத்த கீழார் கொல்லை பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் சாராயத்தை பதுக்கி போலி மதுபானம் தயாரித்து பாண்டிச்சேரிக்கு அனுப்பப்பட்டு வருவதாக மதுவிலக்கு அமல் புலனாய்வுப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாமல்லபுரம் மதுவிலக்கு ஆய்வாளர் தேசிகன், உதவி ஆய்வாளர் அழகிரி உள்பட புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் பண்ணை வீட்டில் அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது அங்கு 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 கேன்களில் 1,750 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த பிரேம்குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தியபோது மேலும் ஒரு ரகசிய அறையில் போலி மதுபானம் தயாரிப்பது தெரிந்தது. இதையடுத்து சாராயம் மற்றும் மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்திய இயந்திரங்கள், பாட்டல்கள், பாண்டிச்சேரி மதுபான வகை ஸ்டிக்கர் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் பிரேம்குமாரிடம் விசாரணை நடத்தியதில் சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் என்றும், மேடவாக்கத்தை சேர்ந்த செல்வம் மாதம் ரூ. 30 ஆயிரத்திற்கு பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்ததும், குமார் என்பவர் எரிசாராயம் விநியோகம் செய்வதும் தெரிந்தது. இவர்கள் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.