தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்
திருவள்ளூர், நவ. 22 - தச்சூர் முதல் சித்தூர் வரையிலான ஆறு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும். அதற்கு பதிலாக ஜனப்பன் சத்திரம் கூட்டுச் சாலையிலிருந்து ரேணிகுண்டா வரை உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பான மனுவை புதனன்று (நவ.20) சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகரிடம், சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராயணன், துணைத் தலைவர் பி.ரவி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் விஷ்வா, ரமேஷ் ஆகியோர் அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம், தச்சூர் முதல் சித்தூர் வரை ஆறு வழிச்சாலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேற்கு மாநிலங்களில் இருந்து துறைமுகங்களுக்குள் செல்லும் வாகனங்கள் சென்னை நகரக்குள் புகாமல், நேரடியாக காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம், பொன்னேரி ஸ்மார்ட் சிட்டி, மஹேந்திர வேல்டு சிட்டி ஆகியவற்றிற்கு விரைவாக செல்லும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 6 வழிச்சாலையை பழைய 4 வழிச்சாலையுடன் இணைக்காமல் புதிய வழித்தடத்திம் அமைப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆறுவழிச் சாலையானது தமிழ்நாட்டில் 48 கி.மீ. ஆந்திராவில் 82 கி.மீ தூரம் கொண்டதாக உள்ளது. அதாவது பொன்னேரி வட்டத்தில் 4 கி.மீ. ஊத்துக்கோட்டை வட்டத்தில் 30 கி.மீ. பள்ளிப்பட்டு வட்டத்தில் 14 கி.மீ. தூரம் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக அரசு 3 ஆயிரத்து 197 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்திற்கு 889 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. குறிப்பாக புலிக்குன்றம் காட்டுப் பகுதியில் 82 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. மேலும் பல்வேறு நீர்நிலைகளை ஆக்கிரமிக்க உள்ளனர். இதனால் சுமார் ஆயிரம் விவசாய குடும்பங்கள் நேரடியாகவும், சுமார் 3 ஆயிரம் விவசாய தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பாதிக்கின்றனர். இது மிகப்பெரிய அளவில் அழிவு மற்றும் பாதிக்கும் செயலாகும். மாற்று ஆலோசனை சித்தூர் செல்வதற்கு ஏற்கெனவே, ஜனப்பன் சத்திரம் - ரேணிகுண்டா வரையிலான 4 வழிச்சாலை ஊத்துக்கோட்டை வழியாக செல்கிறது. தச்சூருக்கும் ஜனப்பன் சத்திரத்திற்கும் 3 கி.மீ தூரம் தான் உள்ளது. ஜனப்பன் சத்திரம் வரை ஏற்கனவே 6-வழிச்சாலை உள்ளது. அதே சாலையில் வந்தால் ஊத்துக்கோட்டை வரை 4-வழிச்சாலை உள்ளது. இதையே 6-வழிச்சாலையாக மாற்றினாலே ரேணிகுண்டா சாலையை அடைந்து விடலாம். சித்தூர் முதல் ரேணிகுண்டா வரை ஏற்கனவே 6-வழிச்சாலை உள்ளது. ஆகவே, பழைய வழித்தடத்தையே 6-வழிச் சாலையை விரிவாக்கம் செய்தால் பெரும் செலவு அரசிற்கு மிச்சமாகும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதார இழப்பை தவிர்விக்கலாம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.