திருவள்ளூர் ஜூலை 20- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பஞ்செட்டியில் பிஜிஆர் என்ற தனியார் நிறுவனத்தில் அனல் மின் நிலையத்திற்கான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. அந்தத் தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர். இவர்கள் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிஐடியு தொழிற்சங்கத்தை துவக்கினர். இதனால் ஆத்திரமடைந்த ஆலை நிர்வாகம் தொழிற்சங்கம் அமைக்க காரணமாக இருந்த 13 பேரை வேலையிருந்நது நீக்கியது.இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தொழிலாளர்கள் நல ஆணையத்தில் முறையிட்டும் எந்த பயனும் இல்லாமல் போனது. வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு கொடுத்தும் தங்களுக்கு நியாயம் கிடைக்க வில்லை என தொழிலாளர்கள் தங்களது கோரிக்கை வெளிப்படுத்தினர். தொடர்ந்து சென்னையில் உள்ள தொழிற்சாலையின் தலைமை அலுவலகம் முன்பு ஜூலை 15அன்று போராட்டத்தில் ஈடுபட தொழிலாளர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்கு 2 நாள் முன்பே அதாவது ஜூலை 13 முதல் கதவடைப்பு செய்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த 120க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலை வாயிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர் பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.