திருவள்ளூர், பிப். 19- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த குழந்தை கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் ஒற்றை சாளர பிரச்சனை தீர்வு மையத்தின் தலைவரான நீதிபதி சரஸ்வதி தலைமையிலான குழுவினர் பிப்.18 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த செங்கல் சூளையில் சுமார் 40 குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் கோட்டாட்சியர் வித்யா கொத்தடிமைகளாக பணி யாற்றி வந்த வடமாநில தொழிலாளர்களை மீட்டு ஊத்துக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் இதே செங்கல் சூளையில் ஒடிசாவை சேர்ந்த பிரேம் ஆனந்த் என்பவர் 10ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு சூளையில் பணியாற்றிய கொத்தடிமைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்ததும், விக்ரம் என்பவர் அவருக்கு உதவியாக இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலி மருத்துவர் பிரேம் ஆனந்த், உதவியாளர் விக்ரம் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். செங்கல் சூளை உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்ப டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.