விடுதிகளில் சேர ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அழைப்பு
விழுப்புரம், மே 30-விழுப்புரம் மாவட்டத்தில் 61 ஆதிதிராவிடர் மாணவர் மற்றும் 26 மாணவிகள் விடுதிகள், 2 கல்லூரி மாணவர் மற்றும் 2 மாணவிகள் விடுதிகள், 2 ஐ.டி.ஐ., மாணவர் விடுதிகள் என மொத்தம் 93 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் தங்கி கல்வி படிக்க விரும்பும் அனைத்து மாணவர், மாணவிகளுக்கும் உணவு, உறைவிடம் இலவசமாக வழங்கப்படும். இலவசமாக 4 இணை சீருடைகளும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். இவ்விடுதிகளில் சேர மாணவர், மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். நான்காம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர், மாணவிகள் விடுதியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். மாணவர்களுக்கு தங்களது இருப்பிடத்திற்கும், மாணவர்களின் பள்ளிக்கும் இடைவெளி 5 கி.மீ., தூரத்திற்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இந்த விதி பொருந்தாது. பள்ளி மாணவர், மாணவிகள் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடமிருந்து விண்ணப்ப படிவங்களைப் பெற்று வரும் ஜூன் 15ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி மற்றும் ஐ.டி.ஐ., மாணவர், மாணவிகள் வரும் ஜூலை 10 ஆம் தேதிக்குள்ளும், விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர், மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.
வந்தவாசி அருகே சோழர்கால கல்வெட்டு
திருவண்ணாமலை,மே 30-திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த எறும்பூர் கிராமத்தில், திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு மையத்தினர் ஆய்வில் ஈடுபட்டனர். மையத் தலைவர் பிரகாஷ் தலைமையில் முனைவர் சுதாகர் உள்ளிட்ட குழுவினர் நடத்திய இந்த ஆய்வில், ராஜராஜ சோழன்காலத்து, மூன்று கல்வெட்டை கண்டறிந்தனர். இதில், 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த, ஒரு கல்வெட்டில், இப்பகுதியில் உள்ள சிவனின் பெயர் பிரமீசுர உடையார் என்றும், அம்மையின் பெயர் காமகோட்டமுடைய பெரிய நாச்சியார் என்றும் குறிப்பிடப்பட்டுள் ளது. கண்ணாரமுதபட்டன் என்பவர், இக்கோவில் தர்ம காரியங்களை கவனித்து வந்ததும் தெரிய வந்தது. மற்றொரு கல்வெட்டில், கோவிலுக்கு ஒருவர் அளித்த, 16 பணம் பெற்று கொண்டதை தெரிவிக்கிறது. எறும்பூர் கிராமம், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, அதே பெயருடன் அமைந்திருப்பதும், ராஜராஜன் காலம் முதல், நாயக்கர் காலம் வரை, கல்வெட்டுக்கள் இங்கு காணப்படுகிறது. இப்பகுதியில் உள்ள கல்வெட்டுகளை பாதுகாக்க தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.