tamilnadu

img

பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு தேங்கும் மழைநீர்

 திருவண்ணாமலை, ஆக. 20- திருவண்ணாமலை பத்திரப் பதிவு அலுவலகம் முன்பு மழை நீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த மிதமான மழையினால் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும், பத்திர பதிவு அலுவலகம் முன்பு, மழைநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தற்போது தேங்கி நிற்கும் மழை நீரால் இப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.  எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதை சீர்படுத்தி மழைநீர் வெளியே செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பதிவு அலுவலகத்திற்கு வரும் மக்கள் குடிநீரின்றி தவித்துவருகின்றனர். திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் பத்திரப் பதிவு அலுவலகம் இணை-2 பழமையான கட்டிடம் என்பதால், தரைமட்டத்திற்கு கீழே உள்ளது. எனவே அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் எனவும், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.