tamilnadu

தற்கொலை முயற்சியில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

திருவண்ணாமலை, மே 24-திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பழைய பள்ளிக் கூடத் தெரு பகுதியில் கடன் பிரச்சனையால் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர்  பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மகன் சீனு (32) வேன் ஓட்டுநராக இருந்தார். இவர் ஆரணியிலுள்ள சுந்தரம் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில்  கடன் பெற்று, சொந்தமாக ஒரு லாரி வாங்கி உள்ளார். கடனை திருப்பி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டதால், கடந்த சில நாட்களாக மன உலைச்சலில் சீனு தவித்து வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த திங்கள் அன்று, ஆரணி சுந்தரம் பைனாஸ் நிறுவனத்தினர் சீனு வீட்டிற்கு சென்று, அவரை மிரட்டியுள்ளனர்.  மேலும், இவருக்கு சொந்தமான லாரியை,  ஜப்தி செய்து எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த சீனு குடும்பத்தினருடன், அருகில் உள்ள, இமாபுரம் பகுதியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள் ளார், இதில் சீனுவின் மனைவி விஜயலட்சுமி(24), மகன் ரித்திக் ரோஷன்(6)  ஆகியோர் உயிரிழந்தனர். தொடர்ந்து சீனு (32) அவரின் மகள்கள் தீவதர்ஷினி (11), பிரிதிஸ்ரீ(8)  ஆகியோருக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் தீவதர்ஷினியும் உயிரிழந்தார். இந்நிலையில் வியாழனன்று (மே 23) திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு வந்த சுந்தரம் பைனான்ஸ் நிர்வாகி ஒருவர், சீனிவின் உறவினர்களை மிரட்டியதுடன், சீனுவை பற்றி அவதூறாகவும் பேசியுள்ளார். அதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை சிகிச்சை பெற்று வந்த சீனுவும் உயிரிழந்தார். சீனுவின் குடும் பத்தில் எஞ்சியிருக்கும் கடைசி உயிர் பிரிதிஸ்ரீக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் ஒருவர் உயிரிழந்து வரும் அவலத்தில் சிக்கியுள்ள சீனிவின் தம்பி மஞ்சுநாதன், உடனடியாக சீனுவின் உடலை பெற்றுச் சென்று அடக்கம் செய்யுமாறு, போலீசார் வற்புறுத்துவதாக வேதனை தெரிவித்தார்.