திருவண்ணாமலை, மே 30- திருவண்ணாமலையில் மலர் சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் வாடிப் போயுள்ளனர். பொன்னை வைக்கும் இடத்தில் பூவை வைக்கலாம் என்பது ஒரு பழமொழி. கடும் வறட்சி காலத்தில் பூக்களை பயிரிட்டு அவற்றை பராமரித்து, சாகுபடி செய்து கடும் சிரமங்களுக்கிடையே சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். பண்டிகை, சுப தினங்களில் சம்பங்கி மலர்கள் கிலோ ரூ 50 முதல் 250 வரை விற்பனையாகும். அதையும் மீறி தேக்கம் ஏற்பட்டால், சென்னை, பெங்ளூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும்.
ஆனால், தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மலர்கள் விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அவைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டாததால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பங்கி அதிகளவில் பயிரிடப்படுகிறது . தற்போது மலர் சந்தையில் ஒரு கிலோ சம்பங்கி 10 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. சில விவாசாயிகள் சேலத்தில் உள்ள சென்ட் ஆலைக்கு குறைந்த விலையில் பூக்களை விற்பனை செய்யும் சூழலும் உள்ளது. பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், தற்போதைய இந்த விலை பூக்களை பறிக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.