tamilnadu

வறட்சி நிவாரணம் கோரி விவசாயிகள் சங்கம் தீர்மானம்

திருவண்ணாமலை, மே 22-திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி, ஜூன் 10 அன்று அனைத்து தாலுகா அலுவலகத்திலும் மனு கொடுக்கும் இயக்கம் நடத்துவது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தீர்மானம் இயற்றியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கூட்டம் திருவண்ணாமலை முத்தம்மாள் நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு டி.கே. வெங்கடேசன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், கரும்பு, நெல், வாழை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் திட்டம் மூலம், நிவாரணம் வழங்க வேண்டும். சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.விவசாயிகள் வாங்கியிருந்த கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், திருவண்ணாமலை மாவட்டத்தில் கரும்பு விவசாயிக ளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை உடனே வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு பாரதப் பிரதமர் அறிவித்த உதவித் தொகை 6 ஆயிரம் ரூபாய் திட்டத்தில், அனைத்து விவசாயிகளுக்கும் உதவி திட்டம் வழங்க வேண்டும், திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு இலவச தீவனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.