tamilnadu

img

தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

திருவண்ணாமலை, மே 14-திருவண்ணாமலை மாவட்டத்தில் தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கொட்டாவூர் கிராம தலித் மக்கள் கடந்த மாதம் 18 ஆம் தேதி வாக்களித்து விட்டு சென்றனர். அப்போது, வழி மறித்த பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோர் இரும்பு கம்பி, கட்டை, கைத்தடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.மேலும், அம்பேத்கர் படம் போட்ட சட்டையை அணிந்து கொண்டு எப்படி வரலாம் என்றும் இனிமேல் இப்படி வந்தால், கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். அவர்களின் தாக்குதலுக்கு பயந்து, இளைஞர்கள் தங்களின் வீடுகளை நோக்கியுள்ளனர். அப்போதும் அந்த கும்பல் தலித் இளைஞர்களை விடவில்லை. வீடுவரை துரத்திச் சென்று கொலைவெறியுடன் தாக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் புகழ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவர் காயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரும், அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் புகழ் என்ற இளைஞருக்கு, மார்புப் பகுதி மற்றும் உயிர் நாடியில் வலி ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த இரண்டு இளைஞர்களையும் விசாரணை என்ற பெயரில் செங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களை பார்ப்பதற்கு வந்த, கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன், ரஜினி, பெருமாள் ஆகியோரையும் அந்த கும்பல் தாக்கியிருக்கிறது. இந்த தாக்குதலை அறிந்து, குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர்கள், கொட்டாவூர் தலித் இளைஞர்களை பார்ப்பதற்கு வந்துள்ளனர். அப்போது, பாட்டாளி மக்கள் கட்சி படம் போட்ட மஞ்சள் கலர் டீ சர்ட் அணிந்து கொண்டு வந்த இளைஞர்கள், குப்பநத்தம் கிராமத்திலிருந்து, வாகனத்தில் வந்த இளைஞர்களை வழிமறித்து அடித்துள்ளது.உயிருக்கு பயந்து, தலித் இளைஞர்கள் ஓடியுள்ளனர். இத்தகைய கொடூர தாக்குதலை நடத்தியவர்கள் மீது, வழக்குப்பதிவு செய்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக்கோரியும் தலித் இளைஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை, ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.சங்க நிர்வாகிகள், ப.செல்வன், எஸ்.ராமதாஸ், சிபிஎம் மூத்த தலைவர் எம்.வீரபத்திரன்ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர்.