திருப்பூர், மே 15 -திருப்பூர் சாயஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக் கழிவுகளால் மண் வளம் பாதிக்கப்பட்டு உயிர்த்தன்மை இழந்து வருவதாக ரசாயன ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பாதிப்பின் ஆழத்தைக் கண்டறியவும், அதற்கு தீர்வு காணவும் அரசு நிர்வாகம் வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் மண் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு ஆதாரமாக சாய ஆலைகள் திகழ்கின்றன. வண்ண, வண்ண பின்னலாடைகள் உற்பத்திக்கு சாயமேற்றும் தொழிற்சாலைகள் இங்கு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஏராளமாக தொடங்கப்பட்டு தற்போது 800க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் உள்ளன. ஆரம்ப காலத்தில் நவீன தொழில்நுட்பம் இல்லாத நிலையில் சாயமேற்றப்பட்ட பிறகு கழிவுநீரை மேம்போக்காக சுத்தம் செய்து, அப்படியே நிலத்திலும், நீரிலும் வெளியேற்றும் நிலை இருந்தது. எனினும் அதன் பாதிப்பு வெகுவிரைவாக உணரப்பட்டது. குறிப்பாக நொய்யல் ஆறு மாசுபட்டது. நிலத்தடி நீர் மாசுபட்டு குடிநீரும், விவசாய பாசனமும் பாதிக்கப்பட்டது. நிலத்தடி நீராதாரம் மிக கடுமையாக பாதித்ததுடன், ஆற்றுப் பாசனத்தை நம்பி இருந்த ஈரோடு, கரூர் மாவட்ட விவசாயத்தையும் பாதித்தது. விவசாய பாசனத்திற்கு பயன்படுத்துவதற்காக கட்டப்பட்ட ஒரத்துப்பாளையம் நீர்த்தேக்கம், சாயக்கழிவுநீர்த் தேக்கமாக மாறி ரசாயன அணுகுண்டு என்று பெயர் பெற்றது.இதனால் விவசாயிகள் பாசனத்தை மட்டும் இழக்கவில்லை, நிலத்தின் உயிர்த்தன்மையும் அழிந்தது. மக்களுக்கும், கால்நடைகளுக்கும் குடிக்கும் நீர்கூட நஞ்சானது. உச்சநீதிமன்றம் வரை வழக்கு நடத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த சாய ஆலைகளும் மூடப்பட்டன.
அதன் பின் சாயக் கழிவுநீரையோ, கழிவை நீக்கி சுத்திகரித்த நீரையோ வெளியே நிலத்தில் ஒரு சொட்டுகூட விடாதபடி, மறுசுழற்சி தொழில்நுட்பம் அமல்படுத்தும் நிலை ஏற்பட்டது.இன்றைக்கும் உலக அளவில் பின்னலாடைத் தொழில் நடைபெறும் பகுதிகளை ஒப்பிட்டால் நவீன சுத்திகரிப்புத் தொழில்நுட்பக் கட்டமைப்பு நிறுவப்பட்டதில் திருப்பூரே முதன்மையாக உள்ளது. ஆனாலும் கூட குறுகிய லாப நோக்கில் சாயக்கழிவுநீரை நிலத்திலும், ஆற்றிலும் வெளியேற்றும் கொடுமை மறைமுகமாக இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.நீர் மாசு பட்டதை விட நிலம் மாசுபட்டதுதான் அதிகம். வேளாண் பல்கலைக் கழகத்தின் மூலம் மண் ஆய்வு செய்தால் உண்மையான பாதிப்பின் ஆழம் தெரியும் என்று ரசாயன வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாயக்கழிவுநீரை பெரும்பாலான சாயஆலைகள் சுத்திகரிப்புச் செய்தாலும் சுமார் 20 சதவிகிதமான சாயஆலைகள் சுத்திகரிப்புச் செய்யாமல் சாயக்கழிவுநீரை வெளியே விடுகின்றனர். இவை நொய்யல் ஆற்றிலும், விவசாயப் பாசனப் பகுதிகளிலும், சுற்று வட்டார நிலங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன என்று அந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.துணி, ஆடைகளைச் சாயமேற்ற அடிப்படையாக பயன்படுவது ரசாயன உப்புகள்தான். இந்த உப்புகளை பயன்படுத்துவதில் இருந்துதான் ரசாயனக் கழிவு உருவாகிறது. ஆனால் உப்பை நீக்கி சாயமேற்றும் நவீன முறையைக் கண்டறிய மத்திய அரசின் சார்பு ஆராய்ச்சி நிறுவனம் முயற்சி மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அது எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பது கேள்விக்குறியே.இந்நிலையில் சாயக்கழிவுநீரை சுத்திகரித்து அடர் உப்புத்தன்மை கொண்ட கழிவுகளை நீக்கவும் தொழில்நுட்பம் உள்ளது.
எனினும் அதிக செலவு பிடிக்கும் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த பல சாயஆலைகள் முன்வருவதில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக பொது சுத்திகரிப்பு நிலையங்கள் கூட இதை சரியாக பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.சாயஆலைகள் கழிவுநீரை வெளியேற்றி சுற்றுப்புறச் சூழலுக்கும், நீராதாரத்துக்கும் அழிவு ஏற்படுத்துவது பற்றி மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முழுமையான கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் தவறு செய்வதற்கு ஏற்ப லஞ்சம் வாங்குவது அதிகரிக்கிறதே தவிர, தவறைத் தடுப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்வதில்லை என்றும் சாயத்தொழில் துறையினர் கூறுகின்றனர்.பொதுவாக நீரின் உப்புத்தன்மையைக் கணக்கிட்டு காட்டி சுத்திகரிப்புச் செய்யப்பட்டதாக விட்டு விடுகின்றனர். ஆனால் உண்மையில் சாயக்கழிவுநீரை சுத்திகரிப்புச் செய்தாலும்கூட அதில் கலந்திருக்கும் அடர் உப்புகள் நிலத்தில் படிந்து தீங்கு ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நீரின் தன்மையை ஆய்வு செய்தால்மட்டும் போதாது, நிலத்தை ஆய்வுக்கு உட்படுத்தும் போதுதான் உண்மையான பாதிப்பி்ன் ஆழத்தை அறிய முடியும். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.குறிப்பாக கோவையில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மண் பரிசோதனை மையம் உள்ளது. இங்கு திருப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மண்ணை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தினால் சாயக்கழிவுநீரால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் தன்மையை அறிய முடியும். அதற்கேற்ப வருங்காலத்தில் சாயக்கழிவுநீரை வெளியேற்றுவதை முழுமையாகத் தடுக்கவும், நிலம் நஞ்சாவதைத் தடுக்கவும் முடியும். அத்துடன் நிலத்தின் உயிர்த்தன்மையைப் புத்துயிரூட்டி மண் வளத்தை பாதுகாக்கலாம். இது பொதுவாக சுற்றுச்சூழலுக்கும், குறிப்பாக நீராதாரத்துக்கும், விவசாய, கால்நடை, குடிநீர் பயன்பாட்டுக்கும் பெரும் உதவியாக இருக்கும். எனவே திருப்பூரில் மண் ஆய்வுக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரசாயன வல்லுநர்கள் வற்புறுத்துகின்றனர். செவி சாய்க்குமா தமிழக அரசு நிர் வாகம்? (ந.நி)