காலமானார்
திருப்பூர், மே 30 -திருப்பூர் மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பல்லடம் ஒன்றியக்குழு உறுப்பினருமான பருவாய் பி.நடராஜ் (51) வியாழக்கிழமை காலமானார்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கிய நடராஜ் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை அவர் உயிரிழந்தார்.பி.நடராஜ் பாப்புலர் மில் கிளை சிஐடியு சங்கத் தலைவராகவும் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். அவரது மறைவுக்கு சிஐடியு பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம், விவசாயிகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்தனர். வெள்ளியன்று அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று குடும்பத்தார் தெரிவித்தனர்.
வேகத்தடையின் மீது வர்ணம் பூசுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
அவிநாசி, மே 30-அவிநாசி அடுத்த சுண்டக்காபாளையத்திலுள்ள வேகத்தடையில் வர்ணம் பூசாத காரணத்தினால் தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன. உடனடியாக வேகத்தடையில் வர்ணம் பூசுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அவிநாசி அடுத்த சுண்டக்கா பாளையம் பகுதியில் வளைவில் அடிக்கடி விபத்துகளால் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டது. இந்த வேகத்தடையின் மீது வர்ணம் பூசாத காரணமாக இரு தினங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் விபத்திற்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல இடங்களில் வேகத்தடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வேகத்தடையின் மீது வர்ணம் பூசாததால் இரவு மற்றும் பகல் நேரங்களிலும் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. உடனடியாக நெடுஞ்சாலைத்துறை வேகத்தடையின் மீது வர்ணம் பூசவேண்டும். மேலும் 10 மீட்டர் தொலைவில் வேகத்தடை உள்ளது என அறிவிப்பு பதாகை வைக்க வேண்டும். இதேநிலை தொடருமானால் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு சிபிஎம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார் . இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, வேகத்தடைகளில் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது. சோலார் சிவப்பு விளக்கு சாலையில் பதிக்கும் பணியாளர்கள் விடுப்பில் உள்ள காரணமாக அந்தப் பணி நிறுத்திவைக்கப்பட்டது. கூடிய விரைவில் அந்த பணியும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.