அவிநாசி, ஜூன் 2-அவிநாசி அருகேயுள்ள கருமாபாளையத்தில் பழமையான மரத்தை தனியார் வீட்டுமனைப் பிரிவினர் வேருடன் சாய்த்துள்ளனர். இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.கருமாபாளையம் ஊராட்சி தோட்டக்காடு மற்றும் சாலைத் தோட்டத்திற்கு இடையே பழமையான வேப்பமரம் உள்ளது. இந்நிலையில் இம்மரத்தை அப்பகுதியில் உள்ள தனியார் வீட்டுமனைப் பிரிவை சேர்ந்தவர்கள் ஞாயிறன்று பொக்லைன் இயந்திரம் மூலம் வேருடன் சாய்ந்தனர். இதையறிந்த பொதுமக்கள், தனியார் வீட்டுமனைப் பிரிவினரிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பொதுமக்கள் வருவாய்த்துறையினருக்கு தகவல் அளித்தனர். வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாக பொதுமக்கள் கூறினர்.