திருப்பூர், ஜூன் 6 -திருப்பூரில் நீட் தேர்வினால் உயிர்நீத்த மாணவி ரிதுஸ்ரீ உடலை அவசர, அவசரமாக உடற்கூராய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைத்து மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, மாணவியின் சாவுக்கு காரணமான நீட் தேர்வை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் காவல் துறை, அரசு நிர்வாகம் உடற்கூராய்வு நேரத்தை மாற்றிச் சொல்லி விரைந்து கூராய்வைமுடித்து சடலத்தை ஒப்படைத்தனர். திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், ராஜலட்சுமி தம்பதிகள் பனியன் தொழிற்சாலையில் தையல் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள்ரிதுஸ்ரீ, மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தகுதித் தேர்வெழுதி இருந்தார். புதன்கிழமைநீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இத்தேர்வில் ரிதுஸ்ரீ குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டது. பெற்றோர்இருவரும் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ரிதுஸ்ரீ அலைபேசி மூலம் நீட் தேர்வு முடிவைத் தெரிந்து கொண்டு மனவிரக்தி அடைந்து தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து வந்த செல்வராஜ், ராஜலட்சுமி இருவரும் மகளின் உடலைப் பார்த்து கதறிஅழுதனர். தங்கள் ஒரே மகள் நீட்தேர்வினால் உயிரிழந்ததைச் சொல்லி அழுதது பரிதாபமாக இருந்தது.நீட் தேர்வினால் தங்கள் மகள் உயிரிழந்ததாக செல்வராஜ் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முன்னதாக காவல் துறையினர் நீட் தேர்வைக் குறிப்பிடாமல் புகார் கடிதம் எழுதித் தரும்படி செல்வராஜிடம் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு அடிபணியாமல், உண்மையான காரணத்தைக் குறிப்பிட்டு புகார் கடிதத்தை செல்வராஜ் எழுதிக் கொடுத்தார்.ரிதுஸ்ரீ உடல் திருப்பூர் அரசுமருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அவரது உடல் கூராய்வு செய்த பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குமுன்பே உடற்கூராய்வு செய்யப்பட்டு அவசர, அவசரமாக அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து திருப்பூர் தெற்கு மின் மயானத்துக்கு ரிதுஸ்ரீ உடல் கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
அரசியல் தலைவர்கள் அஞ்சலி!
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி ரிதுஸ்ரீ உடலுக்கு திமுக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.ரிதுஸ்ரீ உயிரிழந்த விபரம் தெரிந்தவுடனேயே புதன்கிழமை மாலை திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்தோர் அவரது வீட்டின் முன்பாக திரண்டனர். ரிதுஸ்ரீ உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திமுக மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவடச் செயலாளர் எம்.ரவி உள்ளிட்டோர் வியாழக்கிழமை காலை முதல் அங்கேயே இருந்தனர்.உடற்கூராய்வு முடிந்து ரிதுஸ்ரீ உடல் ஒப்படைக்கப்பட்டு திருப்பூர் தெற்கு மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு ரிதுஸ்ரீ உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயனுடன், க.செல்வராஜ், செ.முத்துக்கண்ணன், எம்.ரவி உள்படஅரசியல்கட்சி தலைவர்கள் இறுதிநிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.