tamilnadu

img

பொதுத்துறை ஊழியர்களுக்கு பழைய முறையில் 20 சதவிகிதம் போனஸ் வழங்க அ.சவுந்தரராசன் வலியுறுத்தல்

போக்குவரத்து, மின்சாரம், ஆவின் உள்ளிட்ட மாநில பொதுத்துறை ஊழியர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சி 10 சதவிகிதம் போனஸ் வழங்கியது. குறைக்கப்பட்டதை சரி செய்து முன்பு போல் அந்த தொழிலாளர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வலியுறுத்தினார்.

திருப்பூரில் அக்டோபர் 19, 20 ஆகிய இரு நாட்கள் சிஐடியு மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த அ.சவுந்தரராசன் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கார்ப்பரேட்மயமாக்குவது, பணமயமாக்கும் முயற்சி, தனியார்மய முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும். சிறு, குறு நடுத்தர தொழில்கள் மற்றும் முறைசாரா தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு அதில் உள்ள தொழிலாளர்களுக்கு பாதிப்பு நீடிக்கிறது. எனவே மாதம் ரூ.7500 வீதம் ஓராண்டு காலத்துக்காவது வழங்குவதுடன் உணவு பொருட்களையும் ரேசன் கடைகளில் வழங்கி அந்த குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டும்.

போக்குவரத்து, மின்சாரம், ஆவின், சிவில் சப்ளை ஆகிய பொதுத்துறை ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு அதிமுக ஆட்சி போனஸ் வழங்குவதை 10 சதவிகிதமாக குறைத்துவிட்டனர். அதை இந்த ஆட்சி அதை சரி செய்து முன்பு வழங்கப்பட்டது போல 20 சதவிகிதமாக வழங்க வேண்டும்.

சங்கம் வைக்கும் உரிமை

தமிழகத்தில் தொழிற்சாலைகளில் சங்கத்தை அனுமதிக்க முடியாது என்ற கடுமையான போக்கு அதிமுக ஆட்சியில் தொடங்கி, இப்போதும் அது நீடிக்கிறது. தர்மபுரியில் ஹட்சன் ஆரோக்கியா பால் நிறுவனத்தில் கடந்த மூன்று, நான்கு வாரங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. சங்கம் வைத்ததற்காகவே அங்கு வேலை செய்த தொழிலாளர்களை மகாராஷ்டிரா, மும்மை, அஸ்ஸாமுக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர். இதை அனுமதிக்க முடியாது என்று அரசு சட்டப்படி சொல்ல முடியும். ஆனால் தொழிலாளர் துறை அதை தாமதம் செய்கிறது. மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு அதை சீர் செய்ய வேண்டும். முதலமைச்சர் உள்ளிட்டோர் இது போன்ற போக்கில் உடனடியாகத் தலையிட வேண்டும். இல்லாவிட்டால் இது கடும் பிரச்சனையை உருவாக்கும்.

மின்வெட்டு பிரச்சனை

தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்சனை என்பது அதிகாரப்பூர்வமாக இல்லை. ஆனால் எண்ணூரில் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்கும் பீடரை காலை 6 மணி முதல் 10 மணி வரை தினமும் நான்கு மணி நேரம் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு அசோக் லைலாண்ட் போன்ற நிறுவனங்கள் வேலை நேரத்தையும், உற்பத்தியையும் குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தற்காலிக பிரச்சனை என்றால் பரவாயில்லை. ஆனால் தற்காலிகமான பிரச்சனை போல் தொடங்கி நிரந்தரப் பிரச்சனையாக மாறிவிடக் கூடாது. இது தொடர்ந்தால் தொழில் துறை, தொழிலாளர்கள் உள்பட மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி

தமிழ்நாட்டில் மாட்டு வண்டிகளில் ஆற்று மணல் அள்ளுவதை அனுமதிப்பதாக அரசே அறிவித்ததுதான். கொரோனா காலத்தில் அது நிறுத்தப்பட்டது, இப்போது மறுபடியும் அதை அனுமதிக்காததால் 13 மாவட்டங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள், தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு, உணவு இல்லாமல் கொடுமையான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அனுமதித்தால்  சிறு அளவு மணல் கிடைக்கும், சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கும் வாழ்வாதாரம் கிடைக்கும். அரசு ஒப்புக் கொண்டால் அதை அனுமதிப்பதாக மாவட்ட நிர்வாகங்கள் கூறுவதால் உடனடியாக அரசு அனுமதி வழங்க வேண்டும்.

உள்ளாட்சிகளில் ஏற்கெனவே 676 ரூபாய் குறைந்தபட்ச தின ஊதியம் கொடுக்க வேண்டும் என்று  2017இல் அரசாணை வந்துள்ளது. ஆனால் இப்போது அரசு 391 ரூபாய் கொடுத்தால் போதும் என ஆணை பிறப்பிக்கின்றனர். இதெல்லாம் அப்பட்டமான தவறு. அடித்தட்டு மக்களுக்கு எதிரான மிக மோசமான தவறு.

தொழிலாளர் பழிவாங்கலை ரத்து செய்க

போக்குவரத்து, மின்சாரத்தில், முதலமைச்சர் தலைமையில் செயல்படும் மெட்ரோ ரயில் திட்டத்திலும் பழிவாங்கல் நடவடிக்கைகள் உள்ளன. அங்குள்ள 250 பேரும் தண்டிக்கப்பட்டு உள்ளனர். மூன்று பேர் மீது மூன்று பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றை சரி செய்து

போக்குவரத்து, ஆவின், சிவில் சப்ளை, மின்சாரம் போனஸ் பிரச்சனையில் அரசு மேலும் தாமதப்படுத்தக் கூடாது. அரசு தாமதப்படுத்தாமல் போனஸ் தருவதுடன், சம்பள ஒப்பந்தப் பேச்சுவார்த்தையும் தாமதம் செய்யக் கூடாது. ஒப்பந்தம் முடிந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. அடுத்த செப்டம்பரில் அடுத்த ஒப்பந்தம் வந்துவிடும். எனவே எவ்வளவு நாள் பார்த்துக் கொண்டிருக்க முடியும். தீர்வு காணாவிட்டால் நிச்சயம் வேலைநிறுத்தப் போராட்டம் வரும்.

துரைமுருகன் போன்ற பொறுப்புள்ள அமைச்சரே, எங்கோ ஒரு கண்ட்ரக்டர் தப்பு செய்துவிட்டால், பெண்கள் முறத்தால் அடியுங்கள், என்னிடம் சொல்லுங்கள் நான் டிஸ்மிஸ் செய்கிறேன் என்று  பேசுவது, மக்களை போக்குவரத்து ஊழியர்கள், அரசு ஊழியர்களுக்கு எதிராகத் தூண்டிவிடுவது சரியல்ல, இது அவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆட்சியில் ஏற்பட்ட விசயங்கள் இன்னும் தீர்வு காணப்படவில்லை. வேலைநிறுத்த பழிவாங்கல், வழக்குகள் ரத்து. இப்போது அவர்கள் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். அவர்களை அழைத்துப் பேசி அதில் சுமூகமான முடிவைக் கொண்டு வர வேண்டும். அதைவிட்டு விட்டு முடியாது என்று பேசாமல் இருப்பது சரியல்ல. அரசு இதில் பேசி தீர்வு காண முன்வரும் என எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால்  ஜேக்டோ ஜியோ போராட்டத்துக்குப் போவார்கள்.

அதேபோல் சத்துணவு, அங்கன்வாடி, ஆஷா போன்ற திட்டப் பணியாளர்களும் கடும் வருத்தத்தில் உள்ளனர். அவர்களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.11 ஆயிரம் கூட சம்பளம் கிடையாது. ஆஷா தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம்  தான் சம்பளம் ஆனால் அமைச்சர் ரூ.5 ஆயிரம் என்று யாரோ தவறாக சொன்ன தகவலைச் சொல்கிறார். ஒருவர் கூட ரூ.5 ஆயிரம் வாங்கியது கிடையாது. அரசின் நிதி நெருக்கடி புரியாத பிரச்சனை அல்ல. அதே சமயம் சமூகத்தின் இந்த பிரிவினரை அரசு கை விட்டு விட முடியாது.

போனஸ் ஒரு மாதத்துக்கு முன்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் நியதி. ஆனால் 15 நாட்கள்தான் உள்ளன. இதில் உடனடியாக எதுவும் தெரியாவிட்டால் அடுத்த கட்டப் போராட்டத்துக்கு செல்லும் நிலை உருவாகும். இப்பிரச்சனையை முதல்வர் முடித்து வைக்க வேண்டும்.

கொரோனாவுக்கு பிறகு பாசஞ்சர் ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டு இதுவரை மீண்டும் தொடங்கவில்லை. இதனால் உடனடியாக பழைய முறையில் பாசஞ்சர் ரயில் இயக்க வேண்டும். பண்டிகை காலத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சிறப்பு பேருந்து விட்டு கட்டணத்தைக் கூட்டக் கூடாது. தனியார் ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளையை அனுமதிக்கக் கூடாது.

இந்த பேட்டியின்போது சிஐடியு மாநில  உதவித் தலைவர் எம்.சந்திரன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

;