திருப்பூர், ஜூன் 6 -உலக சுற்றுப்புறச் சூழல் தினத்தை முன்னிட்டும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற இருப்பதை ஒட்டியும் அறிவியலுக்கான இளைஞர்கள் (யூத் ஃபார் சயின்ஸ்) சார்பில் 100 பள்ளிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுப்புறச் சூழல் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், வரும் ஆகஸ்ட் 9 முதல் 11ஆம் தேதி முடிய மூன்றுநாட்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில மாநாடு திருப்பூரில் நடத்தப்படுவதை ஒட்டியும் அறிவியலுக்கான இளைஞர்கள் சார்பில் இந்த இயக்கம் நடத்தப்படுகிறது. ஜூன் 5ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், ஜூன் 6, 7 ஆகிய இரு நாட்கள் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறுகிறது.வனத்துக்குள் திருப்பூர் அமைப்பினர் இதற்கான மரக்கன்றுகளை வழங்கினர். திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, பெருமாநல்லூர், குன்னத்தூர், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் 20 தனியார் நர்சரி பள்ளிகள் மற்றும் 80 அரசுப் பள்ளிகளில் இந்த இயக்கம் நடத்தப்படுகிறது. மொத்தம் 30 இளைஞர்கள் ஒருவருக்கு தலா 3 பள்ளிகள் என்ற அடிப்படையில் இப்பணியை பொறுப்பேற்று நிறைவேற்றுகின்றனர். பள்ளிகளுக்குச் சென்று மாணவர்கள் மத்தியில் சுற்றுப்புறச் சூழல் குறித்து விழிப்புணர்வு கருத்துகளைத் தெரிவித்து, ஒரு மரக்கன்றை நடுகின்றனர். இதில் அறிவியலுக்கான இளைஞர் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கௌரிசங்கர், ஒருங்கிணைப்பாளர்கள் அப்துல் ஜலீல், ராஜேஸ் ஆகியோர் இப்பணியை ஒருங்கிணைத்தனர். அத்துடன் ஒவ்வொரு பள்ளியிலும் நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரித்துப் பாதுகாக்க தலா 5 மாணவர்கள் கொண்ட சுற்றுச்சூழல் மன்றமும் ஏற்படுத்தப்பட்டது. அறிவியலுக்கான இளைஞர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கௌரிசங்கர் இத்தகவலைத் தெரிவித்தார்.