திருப்பூர், மார்ச் 15 – திருப்பூர் அருகே இடுவாய் ஊராட்சி பாரதிபுரம் நடுநிலைப் பள்ளியில் ஞாயிறன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இடுவாய் ஊராட்சிமன்றம், பல்லடம் இமைகள் கண்தான கழகம் மற்றும் பல்லடம் ரெயின்போ ரோட்டரி கிளப் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த முகாமை நடத்தினர். பொள்ளாச்சி ஆராதனா மருத்துவமனை சார்பில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது, அத்துடன் டெங்கு காய்ச்சலுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் கே.கணேசன் முன்னிலையில், ரெயின்போ ரோட்டரி சங்கத் தலைவர் ஜி.ஆறுமுகம் வரவேற்றார். ஊராட்சித் துணைத்தலைவர் பரமசிவம் வாழ்த்தினார். இதில் பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.