திருப்பூர், மே 30 -தமிழகத்தில் வேறு எங்கு வெற்றி பெறாவிட்டாலும் உறுதியாக திருப்பூரில் வெற்றி பெறும் என்ற ஊடகங்களின் கருத்துக் கணிப்பை பொய்யாக்கி, அதிமுக கோட்டை என்பதை மக்கள் சக்தி தகர்த்து விட்டது என்று திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் கூறினார். திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே.சுப்பராயனை வெற்றி பெறச் செய்தவர்களுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், கொமதேக உள்பட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஊழியர்கள் பெருந்திரளாகப் பங்கேற்ற நிலையில் அரங்கம் நிரம்பி வழிந்தது.இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன்,காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், திமுக மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் உள்பட தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் உரையாற்றினர். நிறைவாக கே.சுப்பராயன் நன்றி தெரிவித்து உரையாற்றினார். அப்போது ஊடகங்களின் கருத்துக் கணிப்பைப் பொய்யாக்கி, திருப்பூர் தொகுதி என்றாலே அது அதிமுகவின் கோட்டை என்ற கருத்தையும் மக்கள் சக்தி தகர்த்துவிட்டது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் தோல்வி இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் பின்னடைவு ஆகும். மோடியின் உண்மையான போக்கை காலம் மக்களுக்கு உணர்த்தும். அதுவரை எதிர்க்கட்சிகள் பொறுமையோடு மக்களிடம் இந்த அரசைப் பற்றி தெரிவிக்க வேண்டும் என்றார்.நிறைவாக திமுக மாநகரச் செயலாளர் டி.கே.டி. மு.நாகராஜ் நன்றி கூறினார்.