கொரோனா நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிப்பதிலும், நோய் பரவலைத் தடுப்பதிலும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை முழுமையான, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழுக் கூட்டம், ஆகஸ்ட் 12ஆம் தேதி, புதன்கிழமையன்று கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால் தலைமையில் தியாகி பழனிச்சாமி நிலையத்தில் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துக் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும், கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே அர்ப்பணிப்புடன் பாராட்டத்தக்கப் பணியாற்றி வருகின்றனர். இதனால் மருத்துவர்கள் உள்ளிட்டோரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துவிட்டார்.
அதேசமயம் சுகாதாரத் துறை, மாவட்ட நிர்வாகம் கொரோனா சிகிச்சை மற்றும் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் நன்கு திட்டமிட்டு, ஒருங்கிணைந்த முறையில் செயல்படுவதிலும், கண்காணிப்பதிலும் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன.
ஆக்சிஜன் பற்றாக்குறை
குறிப்பாக திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை கொரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெறக்கூடியவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்யப்படவில்லை. அங்கு மூச்சுத் திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம், வெண்டிலேட்டர் வசதி குறைவாக இருப்பதுடன், போதுமான உயிர்வாயு (ஆக்சிஜன்) வசதி இல்லாததாலும், இரவு நேரத்தில் அந்த வார்டில் சிறப்புப் பணி செய்ய மருத்துவர், செவிலியர்கள் இல்லாததாலும் நோய் தொற்றில் தீவிரமாக பாதிக்கப்பட்டோர் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அத்துடன், உயிரிழப்புகளும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அவசியமான தருணத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர், செவிலியர் இல்லாவிட்டால் தனி கொரோனா வார்டு செயல்படுவதன் நோக்கமே அர்த்தமற்றதாகிவிடும். எனவே 24 மணி நேரமும் அங்கு மருத்துவர், செவிலியர்கள் இருப்பதற்கு உரிய பணி ஏற்பாட்டை சுகாதாரத் துறை நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.
தரமான உணவு தருக
அத்துடன் அங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் தரமான உணவு வழங்குவதிலும் முறையான கவனிப்பு, கண்காணிப்பு இல்லை. இதனால் கால தாமதமாக உணவு வழங்கப்படுவதுடன், உணவின் தரமும் சரியாக இல்லை என்ற புகார் வருகிறது. எனவே இதையும் கண்காணித்து மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் சரியான நேரத்தில் தரமான உணவு வழங்குவதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.
ரூ.50 லட்சம் இழப்பீடு
திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர் ஒ.ஆறுமுகம் கொரோனா தொற்று தாக்குதலால் உயிரிழந்துவிட்டார். முன்களப் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய பரிசோதனை, பாதுகாப்புக் கருவிகள், உபகரணங்கள் முழுமையாக வழங்க வேண்டிய அவசியத்தை தொடர்ந்து பலரும் வலியுறுத்தி வந்தாலும், இதிலும் நிர்வாகம் அலட்சியமாக இருப்பதைத்தான் இந்த பணியாளர் உயிரிழப்பு உணர்த்துகிறது.
எனவே அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் கொரோனா தொற்றுப் பரிசோதனை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகம் வழங்கிட வேண்டும். தமிழக அரசு ஏற்கெனவே முன்களப் பணியாளர் உயிரிழந்தால் ரூ.25 லட்சம் வழங்குவதாக அரசாணை பிறப்பித்திருக்கிறது. ஆனால் ஏற்கெனவே முதல்வர் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார். எனவே அவர் அறிவித்தபடி அரசாணையை மாற்றி, உயிரிழந்த தொழிலாளி ஆறுமுகத்தின் குடும்பத்தாருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி மற்றும் அவரது குழந்தைகளின் கல்விச் செலவுக்கும் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய பரிந்துரைகளை தாமதமின்றி தமிழக அரசுக்கு அனுப்பி, உடனடியாக நிவாரணம் கிடைப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.
பரிசோதனையை தீவிரப்படுத்துக
கொரோனா தொற்றினால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவரது குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்களுக்கு உடனடியாக தொற்றுப் பரிசோதனை செய்ய வேண்டும், அவர்களையும் தனிமைப்படுத்தி முழுமையான கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். ஆனால் குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டால், மற்ற குடும்ப உறுப்பினர்கள், தொடர்பில் இருந்தவர்களுக்கு பெயரளவுக்குத்தான் பரிசோதனை செய்யப்படுவதாக தகவல் வருகிறது. இதனால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என அனுப்பி விடுவதாகவும், பிற்பாடு அவர்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் புகார்கள் வருகின்றன. எனவே இந்த விசயத்தில் அலட்சியமான செயல்பாட்டை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது, இதனால் கொரோனா தொற்றுப் பரவலையும் கட்டுப்படுத்த முடியாது. எனவே பாதிக்கப்பட்ட குடும்பத்தார் மற்றும் தொடர்பில் இருந்தோர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை முழுமையாகச் செய்வதுடன், தனிமைப்படுத்தி, தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்துவதையும் முழு அக்கறையுடன் செயல்படுத்த வேண்டும்.
மக்கள் ஒத்துழைப்பு
மாநகராட்சி நிர்வாகம் திருப்பூர் முழுவதும் நடமாடும் பரிசோதனை ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதை மாநகரின் அனைத்துக் குடியிருப்புப் பகுதிகளிலும் முழுமையாக செயல்படுத்த வேண்டும். பொது மக்களும் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்களை கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தம்மையும், தன் குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொள்வதுடன், சமூகப் பரவல் என்ற நிலையையும் கட்டுப்படுத்தி பாதிப்பை பெருமளவு குறைக்க முடியும்.
எனவே திருப்பூர் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை கொரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளில் முழுமையான, ஒருங்கிணைந்த செயல்பாட்டை முழு அக்கறையுடன் மேற்கொள்வதுடன், கண்காணிக்கவும் வேண்டும். பொது மக்களும் தங்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்தி நோய் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு கேட்டுக் கொள்வதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.