tamilnadu

img

நோய் தொற்று – அவிநாசி முழுவதும் சீல்

அவிநாசி, ஏப் 15- அவிநாசி பகுதியில்  ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவிநாசியில் பிரதான சாலைகள் உள்பட அனைத்து பகுதிகளும் "சீல்' வைக்கப்பட்டுள்ளது.
அவிநாசி அருகே தேவராயம்பாளையம் பகுதியில் ஏற்கனவே தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்தர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அப்பகுதி கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு அனைத்து பகுதிகளும் தடுப்புகள் அமைத்து சீல் வைக்கப்பட்டது. இதில் கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாக உறுதிசெய்யப்பட்டவர் கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் அவிநாசியில், தில்லி சென்று வந்தவர்கள் குடும்பத்தினர், வெளிநாடு, வெளிமாநிலம் உள்ளிட்டவற்றிற்கு சென்று வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தில்லி சென்று வந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவிநாசி- மங்கலம் சாலையைச் சுற்றிலும் 5 கிலோ மீட்டர் தொலைவு கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அவிநாசி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சாலையப்பாளையம், சேவூர் சாலை, மடத்துப்பாளையம், ஆட்டையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை தடுப்புகளால் தடுக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியிடங்களுக்கு சென்று வரக் கூடாது என்றும், வெளிப் பகுதியில் வசிக்கும் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்குள் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதையடுத்து, அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தினசரி சந்தை, காய்கறி, பால் விற்பனை செய்யும் கடைகளையும் மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கான காய்கறி, மளிகைப் பொருள்கள் வண்டிகளில் விற்பனை செய்ய ஏற்பாடு நடைபெற்று வருகிறது.