அவிநாசி, மே 5- அவிநாசி பேரூராட்சி பகுதியில் இரண்டு கடைகளுக்கு திங்களன்று சீல் வைத்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில பகுதிகளில் மே 4 ஆம் தேதியிலிருந்து சில விதிமுறைகளுடன் ஊரடங்கு உத்தரவு அரசால் தளர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் அவிநாசி பேரூராட்சி பகுதியில் வைரஸ் தொற்று பரவல் காரணமாக அப்பகுதி தற்போது வரை பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் திங்களன்று மதியம் சேவூர் செல்லும் சாலையில் உள்ள எலக்ட்ரானிக் கடை, மங்கலம் சாலையில் உள்ள பேன்சி கடைகள் உள்ளிட்டவைகள் எவ்வித அனுமதியும் இன்றி திறந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த அவிநாசி காவல்துறை அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி நிர்வாகமும் சம்மந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைத்தனர்.