திருப்பூர், மே 15 –46ஆவது இந்திய பின்னலாடைக் கண்காட்சி திருப்பூரில் புதனன்று தொடங்கியது.திருப்பூரில் 46 வது கோடை கால சர்வதேச பின்னலாடை கண்காட்சி அவிநாசி சாலையில் உள்ள ஐ.கே.எப்.வளாகத்தில் துவங்கியது.இக்கண்காட்சியை ஹேண்ட் லும் மற்றும் காதி துறையின் தமிழ்நாடு முதன்மை செயலர் குமார் ஜெயந்த் ஐ.ஏ.எஸ், நிட் பேர் அசோசியேஷன் தலைவர் சக்திவேல் ஆகியோர் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தனர். இந்த கண்காட்சி வரும் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் காட்டன் அல்லாத பாலியஸ்டர்,வகை ஆடைகள் மற்றும் காட்டன் லினன் காட்டன் ஆடைகள் மற்றும் வாழை மரத்தின் நார் மற்றும் பருத்தி இழைகளால் செய்யப்பட்ட புதிய ரக ஆடைகள் இடம் பெற்றுள்ளன.இந்த கண்காட்சியை காண இஸ்ரேல்,கனடா,ஆஸ்திரேலியா,சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து 100 வர்த்தகர்கள், 40 க்கும் மேற்பட்ட அயல் நாட்டு இறக்குமதியாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் 50 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா சண்முகம், நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆயத்த ஆடை மேம்பாட்டு கழகத்தின் தென் மண்டல தலைவர் சக்திவேல் கூறுகையில்: திருப்பூரில் 46 ஆவது சர்வதேச பின்னலாடை கண்காட்சி வர்த்தகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வரிவிதிப்பின் காரணமாக ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்திய பின்னலாடை துறைக்குச் சாதகமான சூழ்நிலை இருக்கிறது எனத் தெரிவித்தார்.