tamilnadu

img

மத்திய அரசு ரூ.7500, மாநில அரசு ரூ.5000 கோவிட் பேரிடர் நிவாரணமாக வழங்க வேண்டும் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், ஜூன் 9- கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு ரூ 7500, மாநில அரசு ரூ5000 வழங்கக்கோரியும்.  சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கடனுதவி வழங்கக்கோரியும் செவ்வாயன்று (ஜூன் 9) சிதம்பரத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்  மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, கீரை ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் தமிமுன்அன்சாரி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்  சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியதாவது: கொடுமையான கொரோனா தொற்று வந்துள்ள நிலையில் மத்திய அரசு நேரடியாக நிவாரணம் வழங்க மறுக்கிறது.   மத்திய அரசு ரூ 7500 மாநில அரசு ரூ 5000 ஆறு மாத காலத்திற்கு வழங்கவேண்டும். கொரோனா இந்த மாதத்துடன் முடிகிற காரியமில்லை. ஜூலை, ஆகஸ்ட்,செப்டம்பர் எனச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மாதந்தோறும் மத்திய அரசு ரூ 7500  வழங்க வில்லை என்றால் பட்டினி சாவுகள் அதிகரிக்கும்.  தமிழகத்தில் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. சென்னையில் உள்ள மக்கள்  மிகவும் ஆபத்தான நிலையை  அடைந்துள்ளனர். ஒரு நாளில் 20 பேருக்கு மேல் உயிரிழக்கின்றனர். மாநில அரசு தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக ஏதோ அறிக்கை விட்டுக்கொண்டு எல்லாம் நல்லா இருப்பதாகக் கூறிவருகிறார்கள்.

அரசு கை கழுவுகிறதா?
தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தி தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவம் அளிக்க வேண்டும் என இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் அரசு 25 சதமான தொற்று பாதித்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. ஆனால் ஒருவர்கூட சேர்த்ததாக தெரியவில்லை. மக்களே தங்களைப் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்ற நிலைமைக்கு அரசு கைகழுவி விட்டுள்ளது. இது மிகப்பெரிய ஆபத்தாக முடியும். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் அதிகமான பேர் பாதிக்கப்படும் சூழ்நிலையில் அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு செய்யவில்லை என்றால் மக்கள் மருத்துவமனைக்குக் கூட செல்ல முடியாமல் சாலைகளில் செத்துக் கிடக்கும் நிலை ஏற்படும். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவர்கள், காவல்துறையினர், ஊடகத்தினர், தூய்மைப் பணியாளர்கள் அர்ப்பணிப்போடு பணி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அதிக பொருளாதார பலன் உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட அரசு நிறைவேற்றவில்லை. அதேபோல் அரசு மருத்துவ மனைகளில் 8500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தற்காலிக ஊழி யர்களாக உள்ளனர் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வில்லை. வரும் செப்டம்பர் மாதத்தில் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என அரசு நீதிமன்றத்தில் கூறுகிறது. அப்படி 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டால் அதற்கான தடுப்பு நடவடிக்கை கள் என்னவென்று சொல்ல வில்லை. ஏதோ போகிற போக்கில் சொல்கிறார்கள். மத்திய அரசு கொரோனாவிற்கு சிறப்பு நிதி தமிழகத்திற்கு வழங்கவில்லை, கொடுக்க வேண்டிய நிதியும் கொடுக்கவில்லை. இப்படி நிதி கொடுக்கவில்லை என்றால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு மாநில அரசு எப்படி செயல் செயல்பட முடியும்? மாநில அரசுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் 1,500 மையங்களில் போராட்டங்கள் நடந்தன. இவ்வாறு அவர் கூறினார்.

;