திருநெல்வேலி
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நெல்லையில் 180 படுக்கைகளுடன் ரயில் பெட்டிகளை தனிமை முகாமாக மாற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நபருடன் தொடா்பில் இருக்கும் நபா்கள் கண்டறியப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இதற்காக, தற்காலிக தனிமை முகாம்களாக ரயில்பெட்டிகள் மாற்றப்பட்டு வருகின்றன. சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான படுக்கைகளுடன் தனிமை முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
நெல்லையில் மொத்தம் 10 பெட்டிகளில் 180 படுக்கைகளுடன் தற்காலிக தனிமை முகாம் அமைக்கப்படுகிறது. முதல்கட்ட பணிகள் வியாழக்கிழமை முதல் தொடங்கியுள்ளன. அனைத்துப் படுக்கைகளுக்கும் கொசுவலை உள்ளிட்டவை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை கோட்டத்தில் மொத்தம் 30 பெட்டிகளில் இதுபோன்ற முகாம் அமைக்கப்பட உள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில் இவை தயாராகவிடும் என்றனா்.