திருநெல்வேலி, ஏப். 8- நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தை சேர்ந்தவர் மகாராஜன். இவர் அபுதாபியில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் மதுரை விமான நிலையம் வழியாக திருநெல்வேலி வந்த மகாராஜனுக்கு கொரோனா கிருமி தொற்று ஏற்பட்டிருந்தது. இவரது குடும்பத்தினர் பாளையங்கோ ட்டை பெருமாள்புரம் அருகே வசித்தாலும் கொரோனா பாதிப்பால் மகாராஜன் தனது வீட்டுக்கு செல்லாமல் நெல்லையில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை தொடர்ந்து மகாராஜன் பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தானாகவே முன்வந்து தனக்கு சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார்.இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் முதல் கொரோனா நோயாளியான இவரை உடனடியாக பாதுகாக்கப்பட்ட தனி வார்டில் அனுமதித்த அரசு மருத்துவ குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
மகாராஜனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் அவர் நெல்லையில் தங்கியிருந்த தனியார் விடுதிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.தனிமைப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவில் மகாராஜனுக்கும் அதற்கு பிறகு அனுமதிக்கப்பட்டுள்ள நாற்பது கொரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தொடர் தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது மகாராஜனின் உடல்நிலை நன்கு சீரடைந்து வருவதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்படுவார்" என்றும் டீன் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார் இந்நிலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மகாராஜன் புதனன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு 2 நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது. இதனால்தனி 108 வாகனம் மூலம் நெல்லை பெருமாள்புரத்திலுள்ளஅவரது இல்லத்திற்கு மகாராஜன் அனுப்பி வைக்கப்பட்டார்.