திருநெல்வேலி, ஆக.5- நெல்லை மாநகராட்சியில் புதிதாக துப்புரவு பணி செய்வதற்கு ஒப்பந்தக்காரர்கள் மூலம் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி உள்ளனர். ஒப்பந்தக்காரர்கள் மூலம் வேலை செய்வதை தவிர்த்து சுய உதவிக்குழுக்கள் மூலமாகவே பணி செய்ய வேண்டும், மேலும் 2020-21 ஆம் வருடத்திற்கான தினக்கூலியாக ரூ.634 நிர்ணயம் செய்து ஆட்சியர் உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம்-சிஐடியு சார்பாக மாநகராட்சியிலுள்ள 11 வார்டு அலுவலகங்கள் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 860 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். சி.ஐ.டி.யு நிர்வாகிகள் சுடலைராஜ், வரகுணன், பீர்முகம்மதுஷா, காமராஜ், ராஜன், நாராயணன் குழந்தைவேலு, பேரின்பராஜ், கோபால், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் போக்குவரத்து சங்கத்தினர் பாலு, காசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.