திருநெல்வேலி, அக்.23- நெல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேலப்பாளையத்தில் உள்ள கிங் பீடி கம்பெனியை புதனன்று காலை சி.ஐ.டி.யு பீடி தொழிலாளர் சங்கம் முற்றுகையிட்டது. இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ம.ராஜாங்கம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பன்னீர் செல்வம்,முத்துலட்சுமி, சேர்மத்தாய்,தாமரை, மயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . போராட்டத்தில் சங்க மாவட்ட செயலாளர் எம்.வேல்முருகன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட துணை பொதுச்செயலாளர் மகாவிஷ்ணு, மாவட்ட பொருளாளர் ஆரியமுல்லை ,ஆகியோர் பேசினர். தொடர்ந்து பீடி கம்பெனி நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் ,கிங் கம்பெனியில் உள்ள பீடித்தொழிலாளர்களுக்கு அனைத்து ஊர்களிலும் வாரம் 6 நாள் முழு வேலைவழங்குவதற்கு பதிலாக 2 நாள் மட்டும் வேலை வழங்குவதை மாற்றி 6 நாள் முழு வேலை வழங்க வேண்டும், நரம்பு இலை 1000 பீடிக்கு 100 கிராம் வழங்கிட வேண்டும். அருணாசலபுரம் பீடி கடைகளில் தொழிலாளர் துறையின் முன்அனுமதி வாங்காமல் தொழிலாளர்களிடம் எவ்வித தகவலும் சொல்லாமல் திடீரென கடையை மூடியதை உடனே திறந்திடக் கோரியும், கூடங்குளம் கடையை மூடுவதற்குமுயற்சிப்பதை கைவிட்டு 6 நாள் முழு வேலை வழங்கிடக் கோரியும் இது சம்பந்தமாகபலமுறை தங்கள் கம்பெனி நிர்வாகியிடம் பேசியும், மனு அளித்தும் இதுவரை எந்தவித பதிலும் தெரிவிக்காத காரணத்தால் தொழிலாளர் துறை நடத்தும் விசாரணையில் கலந்து கொள்ளாத கிங் பீடி கம்பெனி மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனு கொடுத்தபின் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் வரும் 29 ஆம் தேதி தொழிலாளர் துறை துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் விசாரணையில் கிங் பீடி கம்பெனி நிர்வாகமும் பீடி தொழிலாளர் சங்கமும் கலந்து கொண்டு தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது, முற்றுகை போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் குருசாமி,பொன்னுசாமி, சண்முகம்,இந்திரா, கிருஷ்ணசாமி,மாரிசெல்வம், கற்பகவல்லி,பெருமாள், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.