கரூர், மே 31-ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அறிவியல் பூர்வமான கல்வியை அரசே வழங்க வேண்டும், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்பட வேண்டிய கல்வி உதவித்தொகை ரூ.14 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் 1500 கி.மீ தூர சைக்கிள் பிரச்சார பேரணி குளித்தலை வந்தது. அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.குளித்தலை சுங்ககேட்டில் நடைபெற்ற பிரச்சார பேரணி விளக்க கூட்டத்திற்கு விதொச முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.ராஜு தலைமை வகித்தார். விவசாய சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, விதொச மாவட்டச் செய லாளர் இரா.முத்துசெல்வன், பயணக்குழு தலைவர் க.நிருபன் சக்ரவர்த்தி, விதொச குளித்தலை முன்னாள் ஒன்றியச் செயலாளர் இளங்கோவன், வாலிபர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் பிரபாகரன், வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் புலியூர், கிருஷ்ணராயபுரம், லாலப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் இந்திய மாணவர் சங்கத்தின் சைக்கிள் பிரச்சார பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.